அதிபர் பதவியை தொடர்ந்து சுதந்திரா கட்சி தலைவர் பதவியையும் ராஜபக்சேவிடமிருந்து கைப்பற்றிய சிறிசேன!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத்தொடர்ந்து, தாம் வகித்து வரும் சுதந்திரா கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே அப்பதவியை புதிய அதிபர் சிறிசேனவுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
இலங்கையின் அதிபராக இரண்டு முறை பொறுப்பு வகித்த ராஜபக்சே, சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, அதிபர் பதவியை இழந்த ராஜபக்சே சுதந்திரா கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தார்.
தேர்தலில் தோல்வியால் ராஜபக்சேவுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. எஸ்.எல்.எப்.பி., விதிகளின்படி, அதிபராக தேர்வு செய்யப்படுபவர் தான் கட்சி தலைவர் பொறுப்பு வகிக்க வேண்டும். இப்படிப்பட்ட விதிமுறையை கொண்டு வந்ததே ராஜபக்சே தான்.

இந்த விதிமுறைப்படி சுதந்திரா கட்சியின் தலைவர் பொறுப்பை, சிறிசேனாவிடம் ஒப்படைக்க வேண்டும் என, அவரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில், இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்த ராஜபக்சே, தற்போது தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதனிடையே, எஸ்.எல்.எப்.பி., தேசிய ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சேவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததைத்தொடர்ந்து, பசில் ராஜபக்சே அமெரிக்காவிற்கு தப்பி ஓடிவிட்டார்.
இதனிடையே நேற்றிரவு, சிறிசேன மற்றும் ராஜபக்சே தனிப்பட்ட முறையில் சந்தித்து கட்சி தலைமை பதவி குறித்து கலந்து பேசியுள்ளனர். அதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இன்று சிறிசேன, சுதந்திரா கட்சி தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications