தமிழீழத்தை நீங்கள் கைவிட்டால்.. "ஜனாதிபதி" ஆட்சி முறையை நான் ஒழிக்கிறேன்: ராஜபக்சே
கிளிநொச்சி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் தனித் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்கு தானும் தயாராக இருக்கிறேன் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் நிலப் பட்டா மற்றும் புலிகளின் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட தங்க நகைகளில் ஒரு பகுதியை தமிழர்களுக்கு ராஜபக்சே வழங்கி பேசியதாவது:
தென்னிலங்கையில் இருப்பவர்களைப் போல புலம்பெயர் தமிழர்களும் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது பற்றி பேசுகின்றனர்.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் வெளிநாடுகளில் தனி அரசாங்கம் அமைத்து பிரதமர் அமைச்சர்கள் என நியமித்து செயற்படுகின்றனர். நீங்கள் எப்படித்தான் செயல்பட்டாலும் இலங்கையில் ஈழம் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
நாங்கள் நடத்தியது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமல்ல. 2009 மே 19ல் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த குறுகிய காலத்திற்குள் வடக்கில் மட்டுமன்றி கிழக்கு, தெற்கு என நாட்டின் அனைத்துப் பகதிகளிலும் மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழங்கக்கூடிய சூழலை எம்மால் ஏற்படுத்த முடிந்தமை எமக்கு மகிழ்ச்சியே.
நீங்களே உங்கள் அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வழிசெய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தினோம். அரசாங்க சார்பிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தோம்.
நீங்கள் உங்களுக்கு விருப்பமான கட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள். எனக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதம் கிடையாது இனம், மதம், பிரதேசம் ஒன்றில்லை, தெற்கிற்கும் வடக்கிற்கும் நானே ஜனாதிபதி அனைவரும் எனது மக்கள் அனைவரையும் நான் சமமாகவே பார்க்கின்றேன்.
புலம்பெயர் தமிழர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனி ஈழம் என்ற பிரிவினைவாதத்தைக் கைவிடுங்கள். ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ராஜபக்சே பேசினார்.












Click it and Unblock the Notifications