காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளாததால் வருத்தம்: சல்மான் குர்ஷித்
கொழும்பு: பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாதது வருத்தம் அளிக்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கொழும்பு சென்றுள்ள குர்ஷித்திடம், தமிழர் பகுதியை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பார்வையிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குர்ஷித், போர் நடைபெற்ற யாழ்ப்பாணம் பகுதியில் 50 ஆயிரம் வீடுகள் கட்டுதல், சாலைகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

அதை பிரதமர் மன்மோகன் சிங்தான் முதலில் பார்வையிட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பால் அது நடைபெறவில்லை. இதற்கு யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்துள்ளேன்.
மாநாட்டைப் புறக்கணித்ததால் என்ன பலன் கிடைத்தது? என்பதை அதை வற்புறுத்தியவர்களே புரிந்து கொள்ள வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மட்டுமே இந்தியா வழங்க முடியும்.
அதேநேரத்தில், இலங்கைப் பிரச்னைக்கு அந்நாட்டு அரசும், மக்களும் தான் தீர்வு காண வேண்டும். அந்தத் தீர்வை வெளியில் இருந்து யாரும் திணிக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications