வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் கமலேந்திரன் கொலை வழக்கில் கைது
கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாண சபையின் எதிர் கட்சித்தலைவரான ஈ.பி.டி.பி. கமலேந்திரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி, இலங்கையின் ஈ.பி.டி.பி. கட்சியின் தெல்ப் பிரிவு சபையின் தலைவராக இருந்த டேனியல் ரெக்ஜியான் (44), நெற்றியில் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக சிகிச்சைக்காக பூங்குண்டு தீவு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட டேனியல் சிகிச்சை பலனின்றி அங்குப் பரிதாபமாக உயிரிழந்தார்.
டேனியலின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி, அவர் நெற்றியில் சுடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. டேனியல் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என அவரது கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணை சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டது.
குடும்பப்பிரச்சினைக் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, அதன்படி, தற்போது வடக்கு மாகாண சபைத் தலைவர் கே. கமலேந்திரன் மற்றும் டேனியல் ரெக்ஜியானின் மனைவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.