வெளிநாடுகளுக்கு செல்ல கே.பி.க்கு இலங்கை நீதிமன்றம் தடை!
கொழும்பு: வெளிநாடுக்கு செல்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு இலங்கை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மலேசியாவில் இருந்த கே.பி.யை இலங்கை அரசு கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது.

இலங்கைக்கு கொண்டு வந்த பின்னர் யுத்தத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான இல்லங்களை கே.பி. நடத்தி வருகிறார். அண்மையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கே.பி. மீது புதிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஜே.வி.பி. கட்சி சார்பில் இலங்கையின் மேல்முறையீட்டு உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கே.பி. மீது மகிந்த ராஜபக்சே அரசு எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை; புலிகள் சொத்துகள், தங்கம் குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜே.வி.பி. கோரி இருந்தது.
இம்மனு மீது நடைபெற்ற விசாரணகளின் போது, கே.பி. வெளிநாடு செல்ல தடை விதித்தது நீதிமன்றம். மேலும் கே.பி.யின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்குமாறும் அந்நாட்டு குடியேற்றத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications