இலங்கை நிலச்சரிவு: 300 இந்திய வம்சாவளித் தமிழர் புதைந்த மீரியபெத்த கிராமத்தில் தொடரும் மீட்புப் பணி
கொழும்பு: இலங்கை மலையகத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 300 இந்திய வம்சாவளித் தமிழர் மண்ணோடு மண்ணாக புதைந்த பதுளை மீரியபெத்த பெருந்தோட்ட கிராமத்தில் இன்றும் 2வது நாளாக மீட்புப் பணி தொடர்கிறது.
இலங்கையில் கொட்டித் தீர்த்த பருவமழையால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் மலையகத்தின் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டன. பதுளை மாவட்டம் ஹல்துமுல்ல பிரதேசத்துக்குட்பட்ட மீரியபெத்த பெருந்தோட்டம் என்ற கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஒட்டுமொத்த கிராமமே மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.
மொத்தம் 140 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் வரை மண்ணில் புதையுண்டனர். அந்த கிராமத்தில் இருந்த கோயிலும் மண்ணில் புதையுண்டது. இதனைத் தொடர்ந்து அங்கு இலங்கை ராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.
இதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் முகாமிட்டிருந்த கமாண்டோ படைகளும் மீரியபெத்த விரைந்தன. மொத்தம் 100 பேர் வரை நேற்று மீட்கப்பட்டனர். அதே நேரத்தில் 20 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. எஞ்சிய 300 பேரை காணவில்லை. இதனால் அவர்கள் அனைவருமே உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டது.
இரவில் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இன்று காலை மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பார்வையிட்ட ராஜபக்சே
மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களை அதிபர் ராஜபக்சே இன்று சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார். மீட்புப் பணி குறித்தும் அவரிடம் அதிகாரிகள் விவரித்தனர்.
PHOTOS | ජායාරූප | புகைப்படங்கள் - President Rajapaksa meets the people displaced by #KoslandaLandslide. #SriLanka pic.twitter.com/jVFzVuhQTJ
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) October 30, 2014
இந்தியா உதவி
இதனிடையே நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு உதவ இந்தியாவும் முன்வந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸை இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா தொடர்பு கொண்டு பேசினார்.