பிரபாகரன் குடும்பத்தில் உயிருடன் இருக்கும் மூவர்- அவர்களா?பகிரங்கமாக அறிவித்த உறவினர் சிவாஜிலிங்கம்
பிரபாகரன் குடும்பத்தில் 3 பேர் உயிருடன் உள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குடும்பத்தில் 3 பேர் உயிருடன் இருப்பதாக அவரது உறவினரும் ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் குடும்பத்தின் பிரதிநிதியாக கருதப்படுகிறவர் சிவாஜிலிங்கம். இலங்கை முன்னாள் எம்.பி. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடியவர்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்த நிலையில் தமிழ்நாடு வருகை தந்தார் சிவாஜிலிங்கம். தமிழ்நாட்டில் பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோரை சிவாஜிலிங்கம் சந்தித்து பேசினார்.

பின்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சிவாஜிலிங்கம் கூறியதாவது: கடந்த 14-ந் தேதி நான் சென்னை வருகை தந்தேன். சென்னையில் சிகிச்சைக்குப் பின்னர் நெடுமாறன் உள்ளிட்டோரை சந்தித்தேன். 2009-ம் ஆண்டு மே 20-ந் தேதி முதலே இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரன் உடலே இல்லை என தொடர்ந்து கூறி வருகிறேன். இப்போதும் அதனையே கூறுகிறேன்.
பிரபாகரன் உடலுக்கு டிஎன்ஏ சோதனை நடத்துங்கள் என அப்போதே கூறினேன். ஆனால் டிஎன்ஏ சோதனை நடத்தவில்லை. பிரபாகரன் மரண சான்றிதழையும் வழங்கவில்லை. மதிவதினியின் சகோதரியை 10 ஆண்டுகளுக்கு முன்னர் நேரில் சந்தித்தேன். அப்போது பிரபாகரன் குடும்பம் முழுவதும் முடிந்துவிடவில்லை. இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என கூறினார். அதாவது பிரபாகரன் குடும்பத்தில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ உயிரோடு இருக்கின்றனர்.
எங்களைப் பொறுத்தவரை பழ.நெடுமாறன் உலகத் தமிழர்களின் தலைவர். அவர் தேர்தல் அரசியலில் ஈடுபடாதவர். அவரை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். உலகத் தமிழர் விடுதலையை நோக்கியே அவர்களது செயல் திட்டங்கள் இருக்கின்றன. இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறினார்.

முன்னதாக பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம் என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications