ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவின் ஆதரவு தேவை: மோடிக்கு வடக்கு மாகாண உறுப்பினர் கடிதம்
கொழும்பு: இலங்கை போர்குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம், மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: வரலாற்று சிறப்புமிக்க, தங்களின், இலங்கை பயணத்தை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆஸ்லோ ஒப்பந்தபடி, இலங்கையில், நிரந்தரமான அமைதி தீர்வு காண இந்தியாவின் தலையீடு அவசியம். இது தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் ஐ.நா.வை வலியுறுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்குமாறு இலங்கையை வலியுறுத்த வேண்டும். சிறைகளில் உள்ள தமிழர்கள் காணாமல் போனவர்களின் விவரங்களை வெளியிடச் செய்ய வேண்டும்.
இலங்கை தமிழர்களின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக மருத்துவர்கள், ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது, தலைமன்னார், ராமேஸ்வரம் இடையே கப்பல் போக்குவரத்து தமிழ்நாட்டிற்கும் பலாலி, திரிகோணமலைக்கு விமான போக்குவரத்து போன்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications