நரேந்திர மோடி இன்னொரு மகிந்த ராஜபக்சே: சொல்வது பசில் ராஜபக்சே
கொழும்பு: இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி, ஆசியாவின் இன்னொரு மகிந்த ராஜபக்சே என்று கருத்து தெரிவித்துள்ளார் மகிந்தவின் சகோதரரான பசில் ராஜபக்சே.
நரேந்திர மோடியின் வெற்றி குறித்து பசில் ராஜபக்சே கூறீயுள்ளதாவது:
ஆசியாவில் இன்னொரு ராஜபக்சேவாக மோடி உருவாகி உள்ளார். இருவருக்கும் இடையே ஒத்த சிந்தனை இருக்கிறது. குஜராத்தில் மோடி எத்தகைய வாக்குறுதிகளைக் கொடுத்து நிறைவேற்றினார். அதையேதான் மகிந்த ராஜபக்சேவும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்து நிறைவேற்றினார்.

இவ்வாறு அவர் கூறீயுள்ளார்.
இதனிடையே நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள்தான் என்று இலங்கையின் அரசியல் விமர்சகரான தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த பேட்டி:
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கப்போகும் நரேந்திர மோடியும் 'ஒரே கொள்கைத் தறியில் நெய்யப்பட்ட துணித் துண்டுகளே.
நரேந்திர மோடியே வெற்றிபெறுவார் என்பதை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஏற்கனவே நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார். அதுவும் தமிழ்நாட்டு கட்சிகளை நம்பாமல் நிச்சயம் மோடி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
இலங்கையை ஆளும் ராஜபக்சேவின் கட்சிக்கும் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் இடையே பெரிய அளவில் நடைமுறை சித்தாந்தங்களில் வேறுபாடுகள் இருக்காது.
ஒத்த எண்ணம் கொண்ட, தேசியவாத, வெகுஜன மக்களை வசப்படுத்தும் கொள்கை கொண்ட ஒருவர் முக்கிய அண்டை நாடான இந்தியாவின் பிரதமராவதை மகிந்த ராஜபக்சே வரவேற்கவே செய்வார்.
இனி ராஜபக்சே என்ன செய்யப் போகிறார்? பவுத்த மதத்தை இலங்கைக்கு அனுப்பிய அசோகச் சக்கரவர்த்தியின் மென்மையான சக்தியை இணங்கி உள்வாங்கிக் கொண்ட இலங்கை மன்னன் தேவநம்பிய திஸ்ஸனை போல இணக்கமாக இருப்பாரா? அல்லது பாஜகவினர் நம்புகின்ற இராமாயணம் கூறுகின்ற இராவணனைப் போல இருப்பாரா ? என்பதையும் ராஜபக்சேதான் தீர்மானிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் விவகாரம் மற்றும் பாகிஸ்தானுடனான இலங்கையின் பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்தியாவுக்கு இருக்கின்ற கலக்கங்கள் பற்றி ராஜபக்சே தயக்கம் காட்டினால், அதற்கான விலையை அவரே கொடுக்க நேரிடும்.
'மோடியின் பாஜக ஆட்சி, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தைப் போலவோ வாஜ்பாய் தலைமையிலான பழைய பாஜக அரசாங்கத்தைப் போலவோ பொறுமையைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications