கனடா தமிழ் பெண் எம்.பி. ராதிகா சித்சபேசன் யாழ்ப்பாணத்தில் கைது- வீ்ட்டுக் காவல்?
யாழ்ப்பாணம்: கனடாவைச் சேர்ந்த தமிழ் பெண் எம்.பி. ராதிகா சித்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு தமிழர்களைச் சந்திக்க வந்தபோது அவரைக் கைது செய்துள்ளது இலங்கை அரசு. தற்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இதையடுத்து கனடா அரசு, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறதாம்.
ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரான ராதிகா சித்சபேசன், கனடா நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் பெண் எம்.பி. ஆவார். அவர் கடந்த 28ம் தேதி யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். பின்னர் அங்குள்ள தனது பூர்வீக ஊரான மாவிட்டபுரம் என்ற பகுதிக்குச் சென்றார். அங்கு தமிழ் மக்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
நேற்று முல்லைத்தீவுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தா். அவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. ஸ்ரீதரனும் செல்லவிருந்தார். இதையடுத்து சிங்கள பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் ஸ்ரீதரன் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். ஆனால அங்கு ராதிகா இல்லை.
இதையடுத்து காவல்துறையினர் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அதன் நுழைவாயிலில் காத்திருந்தனர். இரவு 7 மணியளவில் அவர் டில்கோ விடுதிக்கு திரும்பியபோது அவரை தடுத்து நிறுத்தி கைது செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்தக் கைதால் கனடா அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இலங்கை அரசுடன் அந்த நாட்டு அரசு தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்துள்ளது. கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பேர்டு மற்றும் துணை அமைச்சர் லின் யெலிச் ஆகியோர் தங்களது டுவிட்டர் செய்தியில் இந்த கைது தங்களுக்கு ஆழ்ந்த கவலைகளை தந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ராதிகா வீட்டுக் காவலில் இல்லை என்றும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் இலங்கை காவல்துரையும், ராணுவமும் மறுத்திருப்பதால் இந்த விவகாரத்தில் குழப்பம் நிலவுகிறது.