இலங்கை இறுதிப் போரில் புலிகள் யாருமே சரணடையவில்லை... பொய் சொல்வது கோத்தபாய
இலங்கை இறுதிப் போரில் புலிகள் யாருமே சரணடையவில்லை.. இதற்கு சாட்சிகளே இல்லை என அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருவர் கூட சரணடையவில்லை என அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் காணாமல் போனோர் தொடர்பாக பணியகம் ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் யாருமே சரணடையவில்லை என அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார் கோத்தபாய. இது தொடர்பாக கோத்தபாய அளித்துள்ள பேட்டி:
5,000 வீரர்கள் பலி
இறுதிப் போரில் இலங்கை ராணுவ வீரர்கள் 5,000 பேர் உயிரிழந்தனர். ஒரு வலிமையான நாட்டின் ராணுவ வீர்ர்கள் 5,000 கொல்லப்படும் போது அவ்வளவு பலமில்லாத விடுதலைப் புலிகளுக்கு எப்படியான இழப்பு ஏற்பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும்.
தமிழர்களுக்கு தெரியாது..
இந்த நாட்டின் பிரதமர், அதிபரையே கிராமப்புற தமிழர்களுக்கு தெரியாது. அப்படி இருக்கையில் ராணுவ தளபதிகளிடம் சரணடைந்ததாக தமிழர்கள் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
யாருமே நேரடி சாட்சி இல்லை
விடுதலைப் புலிகள் சரணடைந்ததை யாருமே நேரடியாக பார்க்கவில்லை... பார்த்திருக்கவும் முடிவ்யாது. இலங்கையில் ஜேவிபி ஆயுத கிளர்ச்சி நடத்திய போதும் இப்படி காணாமல் போனவர்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
தடுப்புக் காவலில்...
தடுப்புக் காவலில்தான் சிலர் உள்ளனர். இதை காணாமல் போனதாக கூறப்படுவோரின் பெற்றோர்கள் ஏற்கவே மறுக்கிறார்கள்.
இவ்வாறு கோத்தபாய கூறியுள்ளார்.