இலங்கையில் ப.சிதம்பரம்... வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார்!
கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்.
கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ளார் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பா.சிதம்பரம். இந்த பயணத்தின் போது அவர், இன்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.
சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிதம்பரம், ‘தான் கொழும்பில் நடைபெறும் நிகழ்வு ஒன்றுக்கு வருகை தந்திருப்பதாகவும், இடையில் சற்று நேரம் கிடைத்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், அதனடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து பேசியதாகவும்' தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், வடக்கு மாகாணத்தின் நிலவரங்கள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.