பிரபாகரனின் மேலும் ஒரு வீடு இடிந்த நிலையில் கண்டுபிடிப்பு!
கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க மூத்த போராளிகள் அனைவரும் ஒருசேர நின்று இறுதியாக தாக்குதல் நடத்திய ஆனந்தபுரம் என்ற இடத்தில்தான் இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ந் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கி இருந்த பதுங்கு குழியை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். பூமிக்கு அடியில் பாதுகாப்புடன் கோட்டை போல் அமைக்கப்பட்டு இருந்த அந்த பதுங்கு குழியை ஏராளமான பேர் சென்று பார்த்து வந்தனர். இதனால் அது சுற்றுலா தலமாகியது. பின்னர் அந்த பதுங்கு குழியை இலங்கை ராணுவத்தினர் குண்டு வைத்து நிர்மூலமாக்கினர். தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மேலும் ஒரு வீட்டினைப் இலங்கை ராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனந்தபுரம் பதுங்கு குழி
முல்லைத்தீவு ஆனந்தபுரம் என்ற இடத்தில் பிரபாகரனின் மற்றொரு வீடு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்ப்டுகிறது. ஆனால் இறுதிப் போரில் புலிகளே இந்த வீட்டையும், பதுங்கு குழியையும் தகர்த்து உள்ளனர். இதனால் வீட்டின் உள்ளே இருப்பதை கண்டறியவில்லை என இலங்கை ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் ராணுவத்தினர் இடிந்த கடிடத்தை துளையிட்டு பார்த்துள்ளனர். வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது என கூறப்படுகிறது.
இப் பதுங்கு குழி சுமார் 300 மீட்டர் முதல் 400 மீட்டர் வரை உள்ளது. நிலத்திற்குக் கீழ் இது அமைக்கப்பட்டு உள்ளது. மேலுள்ள வீடு செங்கலால் கட்டபட்டுள்ளது. இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த வீட்டை தற்போது சென்று பார்க்க முடிகிறது.
ஆனந்தபுரம் யுத்தம்
இந்த ஆனந்தபுரத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் அத்தனை பேரும் இறுதிப் போரில் ஒரு சேர களமிறங்கினர். இந்த ஆனந்தபுரம் சமர்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இறுதிப் போர்.
ஆனந்தபுரம் போரில்தான் இலங்கை அரசு தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை திடீரென பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை கூண்டோடு படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.