இலங்கையில் மோடி... இரு நாடுகளுக்கிடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து !
கொழும்பு :இலங்கையில் பிரதமர் நரேந்திரமோடியும், அதிபர் சிறிசேனவும் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

மூன்று நாடுகள் பயணத்தின் இறுதியாக, இன்று இலங்கைச் சென்றடைந்தார் பிரதமர் மோடி. காலை 5.25 மணியளவில் கொழும்பு விமான நிலையம் வந்திறங்கிய மோடியை, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வரவேற்றார்.
பின்னர், அதிபர் மாளிகைக்குச் சென்ற மோடி மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மீனவர் பிரச்னை, இலங்கை தமிழர் விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்புடன் குண்டுகள் முழங்க, மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து :
வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் மோடியும் , சிறிசேனாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இளைஞர்களுக்கான கல்வி, விசா, சுங்கத்துறை, கலையரங்கம் கட்டுதல் ஆகியவற்றிற்கான 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நாடாளுமன்றத்தில் உரை :
மதியம் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அளிக்கும் விருந்தில் மோடி கலந்து கொள்கிறார். அதன் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுகிறார். இதன் மூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியத் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு அடுத்து உரையாற்றும் இரண்டாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையை மோடி அடைகிறார்.
பின்னர், பிரசித்தி பெற்ற புத்த ஸ்தலமான மகாபோதி சொசைட்டி மற்றும் இந்திய அமைதிப்படை நினைவு மண்டபத்தில் இலங்கையில் அமைதிப் பணியில் கலந்து கொண்டு உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
ஸ்ரீலங்கா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் இலங்கையின் வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் அதிபர்கள் ஏற்பாடு செய்யும் விருந்திலும் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
கடந்த 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்ற பிறகு, அங்கு செல்லும் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications