வேறு வழியேயில்லை.. கடைசியில் தமிழர்களிடமே உதவி கேட்கும் நிலைக்கு வந்த ராஜபக்சே!
இலங்கையில் நாளை நடக்க உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தமிழ் எம்பிக்கள் உதவினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று இக்கட்டான நிலையை அடைந்து இருக்கிறார் பிரதமர் ராஜபக்சே.
கொழும்பு: இலங்கையில் நாளை நடக்க உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தமிழ் எம்பிக்கள் உதவினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று இக்கட்டான நிலையை அடைந்து இருக்கிறார் பிரதமர் ராஜபக்சே.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நாளை பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். முடக்கப்பட்டு இருந்த நாடாளுமன்றம் நாளை கூட உள்ளது.
ஏன் முக்கியம்
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களின் ஆதரவை பெறுவது அனைத்து கட்சிக்கும் முக்கியமாகி உள்ளது. இலங்கையில் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225 உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களை கொண்டுள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டுள்ளது. அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 96 இடங்களை கொண்டுள்ளது. இதனால் வாக்கெடுப்பில் வெற்றிபெற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு அவசியம்.
ஆதரவு கேட்டார்
இந்த நிலையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற ராஜபக்சே கடுமையாக முயற்சித்து வருகிறார். ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேரில் சென்று சந்தித்து ஆதரவு கேட்டார். சில எம்பிக்களை தனித்தனியாகவும் அவர் சந்தித்தார்.
ஆதரவு கொடுக்கவில்லை
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளது. இலங்கை போர் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. ராஜபக்சவிற்கு எந்த நிலையிலும் ஆதரவு அளிக்க முடியாது என்றுள்ளனர்.
மிக மோசம்
இந்த நிலையில் தமிழ் எம்பிக்களின் ஆதரவை பெற முடியவில்லை என்று அவர்களை பணம் கொடுத்து ராஜபக்சே வாங்க முயற்சி செய்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று தமிழ் தேசிய கூட்டணி எம்.பி. எஸ்.விளந்திரியன் ராஜபக்சே அணிக்கு தாவியுள்ளார். இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.
வெளியே விட முடிவு
அதேபோல்தான் இலங்கையில் தமிழ் எம்பிக்களின் ஆதரவை பெறும் வகையில் அந்நாட்டு சிறையில் உள்ள விடுதலை புலிகளையும், தமிழ் கைதிகளையும் விடுவிக்க அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. 2009ல் இருந்து சிறையில் இருக்கும் தமிழர்களை விடுதலை செய்தால் நற்பெயர் கிடைக்கும் என்று அவர் நினைப்பதாக தகவல்கள் வருகிறது.
இப்படி ஆகிவிட்டதே
2009 களில் லட்சக்கணக்கான தமிழர்களை போரில் கொன்று குவித்தவர்தான் ராஜபக்சே. இந்த நிலையில் பிரதமர் பதவிக்காக அதே தமிழர்களின் ஆதரவை கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். தமிழர்களுக்கு எதிராக வாழ்ந்து வந்த அதே ராஜபக்சே வேறு வழி இல்லாமல் தமிழர்களிடம் உதவி கேட்கும் நிலைக்கு சென்றுவிட்டார்.