அரசியல் பழி வாங்குவதை நிறுத்துங்கள்- மைத்ரிபால சிறிசேன அரசிடம் மகிந்த ராஜபக்சே கெஞ்சல்
கொழும்பு: தமது குடும்பத்தினர் மீதான அரசியல் பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இதன் பின்னர் அவரது ஆட்சிக் காலத்தில் ராஜபக்சே குடும்பத்தினர் எப்படியெல்லாம் உச்சகட்ட சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் ; ஊழலில் திளைத்தனர் என்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஹம்பந்தோட்டை அருகே ராஜபக்சேவின் பண்ணை வீட்டில் சொகுசு பந்தய கார்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சேயின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ரக்ன லங்கா என்னும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தியதில் ஆயுதக் குவியல்கள் மீட்கப்பட்டன.
இதேபோல் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 700 கோடி ரூபாய் முறைகேடாக பல்வேறு வங்கிக்கணக்குகளில் போடப்பட்டு இருப்பதாகவும் குற்றமும் சாட்டப்பட்டு உள்ளது.
இப்படி அடுத்தடுத்து ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில் கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்சே, எங்களுடைய குடும்பம் 1931-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. எனினும், எப்போதும் போலீஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது கிடையாது.
ஆனால், இப்போது தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசியல் பழிவாங்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கெஞ்சியுள்ளார்.












Click it and Unblock the Notifications