பாஜக ஆட்சி அமைத்தால்...... வியூகம் வகுக்கும் ராஜபக்சே! உத்தவ் தாக்கரேவுடன் ஆலோசனை!
கொழும்பு: ஒரு வேளை வருகிற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வென்று ஆட்சி அமைத்தால் அந்த மத்திய அரசுடன் எப்படி நட்புறவை வளர்ப்பது என்பதற்காக விறுவிறுவென வியூகங்களை இப்போதே, இலங்கை அதிபர் ராஜபக்சே வகுத்து வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பாம்பே வெல்வெட் என்ற ஹிந்தி திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் அண்மையில் தொம்பே என்ற இடத்தில் அவசரமாக தரை இறங்கியதாகவும் அதன் பின்னர் வேறு ஒரு ஹெலிகாப்டரில் அனைவரும் ஏற்றிச் செல்லப்பட்டனர் என்றும் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதற்கும் செய்தித் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? தொடருங்கள்..

ஹெலிகாப்டரில் இருந்தவர் யார்....
ஆனால் சில நாட்களில் வேறு ஒரு செய்தி வெளியான போதுதான் இந்திய, இலங்கை அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகின.. ஆம் தொம்பேவில் தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ஒளிப்படக் கருவிகள் வேறு ஒரு ஹெலிகாப்டருக்கு கொண்டு செல்லப்பட்டதெல்லாம் உண்மைதான். ஆனால் அது திரைப்படக் குழுவினரது ஒளிப்படக் கருவிகள் அல்ல.. இந்தியாவின் பிரபல அரசியல் தலைவர் ஒருவருக்கு சொந்தமானது.. ஹெலிகாப்டரில் இருந்தவரும் அவரே..

உத்தவ் தாக்கரே
அவர் பெயர் உத்தவ் தாக்கரே.. சிவசேனாவின் தலைவர்.. குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான நரேந்திர மோடியால் தமது இளைய சகோதரர் என்று வர்ணிக்கப்பட்டவர்... அன்று ஹெலிகாப்டர் தரை இறங்காமல் போயிருந்தால் உத்தவ் தாக்கரே இலங்கையில் உலா வந்த சுவடே தெரியாமல் போயிருக்கும்.. விடுவார்களா இலங்கை பத்திரிகையாளர்கள்.. அப்படி அவர்கள் தோண்டி துருவியபோது கிடைத்த தகவல்கள் இவை..

உத்தவ் தாக்கரேவுக்கு ராஜபக்சே அழைப்பு
பாரதிய ஜனதா கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற பரவலான கருத்து உருவான நிலையில் உத்தவ் தாக்கரேவை இலங்கை அதிபர் ராஜபக்சே அழைத்து பேசியிருக்கிறார். அத்துடன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் உத்தவ் தாக்கரேவை ராஜபக்சே அழைத்திருக்கிறார்.

ஸ்வபன்தாஸ் குப்தா
அதேபோல் அண்மைக்காலமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சிவசேனாவுக்கு நெருக்கமான ஊடகவியலாளர் ஸ்வபன் தாஸ் குப்தா தொடர்ந்து ராஜபக்சேவை பாராட்டி கட்டுரைகளைத் தீட்டி வருவதையும் சுட்டிக் காட்டுகின்றனர் இலங்கை பத்திரிகையாளர்கள்..

பாஜக ஆட்சி அமைத்தால்..
அதாவது இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி அமைத்தால் அந்த மத்திய அரசை எப்படியெல்லாம் தங்களுக்கு இணக்கமானதாக்கிக் கொள்வது என்பதற்கான அத்தனை லாபி வேலைகளையும் மிக மும்முரமாக ராஜபக்சே அரசு செய்யத் தொடங்கிவிட்டதாம்..

கடந்த காலங்களில்..
இந்த யுக்தியைத்தான் கடந்த காலங்களில் பயன்படுத்தினாராம் ராஜபக்சே. பிரியங்காவின் கணவர் வதேராவை பயன்படுத்தி சோனியா குடும்பத்துடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டாராம். அதேபோல் நாட்டின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவருக்கு மிக நெருக்கமான பெண்மணி மூலமாக அவரையும் தங்கள் வசம் வளைத்துக் கொண்டார் ராஜபக்சே என நீட்டி முழக்குகின்றனர் அந்நாட்டு பத்திரிகையாளர்கள்..

மிலிந்த மொரகொட..
அப்படி பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தால் மிலிந்த மொரகொட என்பவரைத்தான் ஏஜெண்டாக களமிறக்க காத்திருக்கிறாராம் ராஜபக்சே. இவர் 2002ஆம் ஆண்டு ரணில் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர். இவருக்கு தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மிகவு நெருக்கமாம். இந்த நெருக்கத்தின் வழியே பல தலைவர்களை இலங்கைக்கு இணக்கமாக இருக்கச் செய்துவிடுவது என்பது மகிந்தவின் கணக்கு

வெளியுறவுத் துறை அமைச்சர்
இதனாலேயே பாஜக ஆட்சி அமைத்தால் மிலிந்த மொரகொடவை உடனே வெளியுறவுத் துறை அமைச்சராக்கிவிடுவது என்ற திட்டத்திலும் இருக்கிறாராம் ராஜபக்சே.












Click it and Unblock the Notifications