அதிபர் தேர்தலுக்கு உத்தரவிடும் பிரகடனத்தில் நல்ல நேரம் பார்த்துக் கையெழுத்திட்ட ராஜபக்சே!
கொழும்பு: 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சே, அதிபர் தேர்தல் அறிவிப்புக்கான பிரகடனத்தில் கையெழுத்திடும் முன் நல்ல நேரத்திற்காக காத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
இது செவ்வாய் கிரக மோக காலம். இருந்தாலும் ராகு காலம், நல்ல நேரம், எமகண்டம், குளிகை, அஷ்டமி, நவமி என நம்பிக்கைக்கும் பஞ்சமில்லை.
அனைத்துத் துறையிலும் இந்த நம்பிக்கை கொண்டோர் அதிக அளவில் இருக்கத்தான் செய்கின்றனர். இது நம்பிக்கை சம்பந்தமானது என்பதால் அதில் யாரும் தலையிடவும் முடியாது.
நம்ம ஊர் அரசியல்வாதிகள் பெரும்பாலும் இந்த நேரம் பார்த்து எதையும் செய்வது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கே நல்ல நேரம் பார்த்தவர்கள் நமது அரசியல்வாதிகள்.
அதேபோல இலங்கையிலும் ராஜபக்சேவுக்கு இந்த நல்ல நேரம், எமகண்டம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உண்டு. அவர் எதைச் செய்தாலும் நேரம் காலம் பார்த்துத்தான் செய்வாராம்.
இலங்கையில் முன்கூட்டியே அதிபர் தேர்தலை அறிவித்துள்ளார் ராஜபக்சே. இதுதொடர்பாக அவர் பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 3வது முறையாக அவர் அதிபர் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
இந்த பிரகடன உத்தரவில் அவர் கையெழுத்திடுவதற்கு முன்பு நல்ல நேரத்திற்காக காத்திருந்ததை படமாக்கி வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தில் தனது கடிகாரத்தில் நல்ல நேரம் வந்து விட்டதா என்று பார்க்கிறார். அவருக்கு அருகில் நிற்பவரும் தனது செல்போனிலும், கடிகாரத்திலும் நல்ல நேரத்தைப் பார்க்கிறார்.