இந்தியா- இலங்கை இடையே பாலம் கட்டினால் குண்டு வைத்து தகர்ப்போம்: சிங்கள எம்பி மிரட்டல்
கொழும்பு: இந்தியா- இலங்கை இடையே பாலம் கட்டினால் குண்டுவைத்து தகர்ப்போம் என்று சிங்கள எம்பி உதய கம்மன்பில மிரட்டல் விடுத்துள்ளார்.
ராமேஸ்வரம் அருகே, தனுஷ்கோடி-தலைமன்னார் இடையில் பாக் ஜலசந்தி கடலில் பாலம் அமைப்பதற்கான திட்டம் உள்ளதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இந்தியா, இலங்கையை இணைக்கும் வகையிலான இந்தப் பாலம் அமைக்கும் பணி தொடர்பாக இந்திய அரசு தங்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்தது.
முதல்கட்டமாக ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரை செக்போஸ்ட்டில் இருந்து, தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை ரூ.50 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. விரைவில் பாலம் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலம் உறுதி
இந்தநிலையில் இந்தோனேசியாவில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற இலங்கை அரசின் தொழில் அபிவிருத்தி துறை அமைச்சர் கபீர்காசிம், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் பாலம் அமைப்பதன் மூலம் வர்த்தகத்தை மேலும் விரிவாக்க முடியும். பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன. இதுதொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் இலங்கையில் துவங்கப்பட்டுள்ளன எனக் கூறினார்.
எம்பிக்கள் எதிர்ப்பு
இதற்கு சிங்கள எம்பிக்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹெல உறுமய கட்சித் தலைவரும், எம்பியுமான உதய கம்மன்பில கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் கபீர் காசிம் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாலம் கட்டப்போகும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழகமாகிவிடும்...
பாலத்தை கட்டுவதன் மூலம் இந்தியாவையும், இலங்கையையும் இணைப்பதாக கூறினாலும், உண்மையில் இதன்மூலம் இலங்கையின் வடக்குப்பகுதி இந்தியாவின் தமிழ்நாடாக மாறிவிடும்.
தாய்நாடு பறிபோகும்
இந்தியாவில் வேலைவாய்ப்பின்றி இருப்பவர்கள் இலங்கைக்கு வருவார்கள். சிங்களவருக்கு இருக்கும் ஒரே தாய்நாடு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படும். இப்பிரச்னைகளை தவிர்க்க பாலம் அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது.
குண்டு வைத்து தகர்ப்போம்
அப்படி பாலம் அமைக்கப்பட்டால் தேசிய பாதுகாப்பு கருதி, அந்த பாலத்தை குண்டு வைத்து தகர்ப்போம், என்றார்.