11 வயது தமிழ்ச் சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கள கடற்படை வீரர்
கொழும்பு: இலங்கையின் சிங்கள கடற்படை வீரர் ஒருவர் 11 வயது தமிழ்ச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போருக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒடுக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் அப்பாவித் தமிழர்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். ராணுவத்தினர் அங்குள்ள தமிழர்களுக்கு சொல்லமுடியாத துன்பங்களை அளித்து வருகின்றனர்.
துன்புறுத்தப்படும் பெண்கள்:
அதுமட்டுமல்ல பெண்களுக்கு அதிக அளவிலான துன்பங்களை அளித்து துன்புறுத்தி வருகின்றனர். அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், கொடூரமாக கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடூர வன்முறை:
இந்த நிலையில்தான் யாழ்பாணம் பகுதியில் சிங்கள கடற்படை வீரர் ஒருவர் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கடற்படையினர் முகாம்:
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது ஊரியான் கிராமம். இங்கு முகாமிட்டுள்ள கடற்படையினர், பள்ளிக்கூடத்தின் அருகில் தங்கியுள்ளனர்
பள்ளிக்குச் சென்ற சிறுமி:
இந்நிலையில் அக்கிராமத்தினைச் சேர்ந்த 11 வயதான சிறுமி ஒருவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் அச்சிறுமியைக் கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
மிரட்டிய முகாமினர்:
இதனால் கொடூரமான நிலையில் பாதிக்கப்பட்ட அச்சிறுமி தனது பெற்றோரிடம் அச்செயலை முறையிட்டார். ஆனால், அக்கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர்கள் அச்சிறுமியின் குடும்பத்தினரையே மிரட்டி உள்ளனர்.
போலீசில் புகார்:
ஆனால் அதையும் மீறி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்ப்பாணம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கொந்தளிப்பில் தமிழர்கள்:
சிங்கள வீரரால் தமிழ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.