ஊழல் வழக்கு: இலங்கை சுப்ரீம் கோர்ட் மாஜி தலைமை நீதிபதி ஷிராணி விடுதலை!
கொழும்பு: இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா மீதா ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கைவிடப்படுவதாக விசாரணைக் கமிஷன் கூறி விட்டதால், அவரை விடுதலை செய்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
ராஜபக்சே காலத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஷிராணி. அப்போது 2010 முதல் 2012 வரை பதவியில் இருந்தபோது சொத்துக்கள் குறித்த விவரத்தைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவர் மீது ராஜபக்சே அரசு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது. கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ராஜபக்சே படுதோல்வி அடைந்து விரட்டப்பட்டார். புதிய அதிபர் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து ஊழல் விசாரணைக் குழு ஆணையத்தில் ஷிராணி ஒரு மனு செய்தார். அதில் ராஜபக்சே அரசு தன் மீது பழிவாங்கும் நோக்கி்ல் நடவடிக்கை எடுத்ததாகம், அந்த வழக்குகளைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இதையடுத்து அவரது கோரிக்கையைப் பரிசீலித்த விசாரணை ஆணையம், ஷிராணி மீதான புகார்களை கைவிடுவது என்றும் தொடர்ந்து விசாரிப்பதில்லை என்ற முடிவுக்கும் வந்தது. இதை மனு வடிவில் ஷிராணி மீது விசாரணை நடந்து வந்த கொழும்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் தெரிவித்தது.
இதையடுத்து ஷிராணியை விடுவிப்பதாக கொழும்பு தலைமை நீதிபதி ஜிஹன் பிலபிட்டியா உத்தரவிட்டார். மேலும் வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி உத்தரவிட்ட நீதிபதி, ஷிராணியின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.