ராஜபக்சேவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!! சந்திரிகா அணியில் கூண்டோடு ஐக்கியமாகும் 20 அமைச்சர்கள்!!
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக பல அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் கடுப்பாகிப் போன ராஜபக்சே அதிபர் தேர்தலில் தமக்கு எதிராக போட்டியிடும் அவரது கட்சி அமைச்சரான மைத்ரிபால சிறிசேன மற்றும் ஆதரவாளர்களான 3 அமைச்சர்களையும் 3 எம்.பிக்களையும் அமைச்சரவை மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து அவரது கட்சியின் நீண்டகால பொதுச்செயலரும் மூத்த அமைச்சருமான மைத்ரிபால சிறிசேனவை எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளராக களம் இறக்கியுள்ளன.
இதற்கு பின்புலமாக இதே ராஜபக்சேவினால் 9 ஆண்டுகாலத்துக்கு முன்பாக சொந்த கட்சியைவிட்டு துரத்தப்பட்ட முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க செயல்பட்டு வருகிறார் .இந்த நிலையில் மைத்ரிபால சிறிசேன மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்களான ரஜித சேனரத்ன, குணவர்த்தன, துமிந்த திசநாயக்கே ஆகியோரையும் ரஜிவ விஜேசிங்க, அர்ஜூன் ரணதுங்கே, வசந்த சேனநாயக்க ஆகிய எம்.பிக்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ராஜபக்சே அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் முன்னாள் அதிபர் சந்திரிகாவுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளனர்.
இவர்களில் கெஹலிய ரம்புக்வெல்ல தவிர ஏனைய இருவரும் விரைவில் சந்திரிகா அணிக்கு கட்சி தாவ ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அவர்களோடு மேலும் பல அமைச்சர்களும் மகிந்த ராஜபக்சே அரசாங்கத்தை விட்டு வெளியேற உள்ளனர்.
மொத்தம் உள்ள 67 அமைச்சர்களில் 20க்கும் மேற்பட்டோர் சந்திரிகா தலைமையிலான போட்டி அணியில் இணையக் கூடும் என்று தெரிகிறது.
மேலும் ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த எம்.பி, பெருமாள் இராஜதுரை, எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications