மோடி கோரிக்கை நிராகரிப்பு... தமிழர் மாகாணத்துக்கு போலீஸ் அதிகாரம் வழங்க இலங்கை மறுப்பு
கொழும்பு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் உள்பட மாகாண அரசுகளிடம் போலீஸ் அதிகாரத்தை நிச்சயமாக ஒப்படைக்க முடியாது என இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இத்தகவலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடமும் ராஜபக்சே தெரிவித்து விட்டதாக இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்து கொண்டார்.
அப்போது, தமிழர்களுடன் இணக்கமான உறவு நிலவ, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களுக்கு போலீஸ், நில அதிகாரங்களை வழங்க வேண்டும், 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வற்புறுத்தினார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் இந்தியா சென்றிருந்த போது இரு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக அறிய விரும்புவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் அளித்த பதிலாவது :-

மீனவர்கள் பிரச்சினை...
சார்க் அமைப்பு தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்கால திட்டம், பொருளாதார விரிவாக்கம் மற்றும் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

13வது சட்ட திருத்தம்...
இலங்கையில் கால் நூற்றாண்டு காலமாகவே நடைமுறையில் இருக்கும் 13-வது சட்ட திருத்தத்தை இங்குள்ள எந்த அரசாலும் சரிவர அமல்படுத்த முடியவில்லை என்று இந்தியாவிடம் எடுத்து கூறினோம்.

போலீஸ் அதிகாரம் வழங்க இயலாது....
மாகாண அரசுகளுக்குபோலீஸ் அதிகாரத்தை வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் நமது நிலைப்பாட்டையும், இனப்பிரச்சனைக்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் மாகாணத்துக்கு போலீஸ் அதிகாரத்தை வழங்குவது என்பது கொள்கை அளவில் ஏற்புடையது அல்ல என்பதை தெள்ளத் தெளிவாக இந்தியாவிடம் கூறி விட்டோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தம்...
கடந்த 1987ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம், நில அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க இத்திருத்தம் வகை செய்கிறது. இதன் மூலம், தமிழர்-சிங்களர் இடையிலான பதற்றம் தணியும் என்று கருதப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவசியத் தேவை...
அதே சமயத்தில், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் அவசியம் என்று தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண சபையின் கவுன்சிலர் பிரிமஸ் சிரைவா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications