தமிழ்ப் பெண்களை சித்ரவதை செய்தது உண்மைதான்... முதன்முறையாக இலங்கை ஒப்புதல்
கொழும்பு: இலங்கை ராணுவத்துக்கு தேர்வான தமிழ்ப் பெண்களை ராணுவ பயிற்சியாளர்கள் சித்ரவதை செய்தது உண்மைதான் என்றும் அது தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் போலியானவை அல்ல என்றும் இலங்கை ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கையில் தனி ஈழம் வேண்டி விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்குமான இறுதிப் போருக்குப் பின்னர் தமிழ்ப் பெண்கள் பலர் அந்நாட்டு ராணுவத்தினர் சேர்க்கப் பட்டனர். ஆனால் அவ்வாறு சேர்க்கப் பட்ட பெண்கள் உயர் அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெறும் பெண்கள் கடுமையாக உயர் அதிகாரிகளால் தாக்கப் படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்புக் காட்சிகள்....
இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள இணையதளம் ‘ஸ்ரீலங்காகார்டியன்.ஆர்க்'. இந்த இணையதளத்தில் கடந்த வாரம் 4.41 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பானது.

தாக்கும் காட்சிகள்...
அதில், ராணுவத்துக்கு தேர்வான தமிழ்ப் பெண்களை ராணுவ பயிற்சியாளர்கள் தகாதமுறையில் திட்டுவதும், அடிப்பதுமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

ஜெனீவா மாநாடு...
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில் வெளியான இந்த வீடியோ படக்காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மையான காட்சிகள்...
பொதுவாக இறுதிப் போரில் நடந்த மனித உரிமை மீறல் உட்பட தனது குற்றங்களை ஒப்புக் கொள்ளாத இலங்கை முதன்முறையாக இந்த விஷயத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், இந்த வீடியோ காட்சிகள் உண்மையானவை தான் என இலங்கை ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

விசாரணை...
இது தொடர்பாக இலங்கை ராணுவ செய்திதொடர்பாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரியா கூறுகையில், ‘வீடியோ படக்காட்சி பற்றி இலங்கை ராணுவ போலீஸ் படை விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், அக்காட்சி உண்மையானது என்று தெரிய வந்துள்ளது.

ஒழுக்கத்தை மீறியதற்காக தண்டனை...
அச்சம்பவம், 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம், இலங்கையின் வடக்கு மத்திய மாவட்டமான அனுராதபுரத்தில் நடந்தது. ராணுவ ஒழுக்கத்தை மீறியதற்காக, அந்த பெண் தேர்வர்களுக்கு ராணுவ பயிற்சியாளர்கள் தண்டனை அளித்தனர்.

பூர்வாங்க அறிக்கை....
அதற்காக அவர்கள் கையாண்ட அணுகுமுறை, வழக்கமான நடைமுறையில் இல்லாதது. அவர்களே தங்கள் அதிகாரத்தை மீறி, வரம்புமீறி செயல்பட்டுள்ளனர். பூர்வாங்க விசாரணை அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மறுப்பு...
இதற்கு முன்னர் பிடிபட்ட விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்றதாகவும், பெண் போராளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பல வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஆனால், அவையெல்லாம் தில்லுமுல்லு செய்யப்பட்ட காட்சிகள் என்று இலங்கை ராணுவம் கூறி வந்தது.

முதன்முறையாக...
முதல் முறையாக, தற்போது ராணுவத்தின் சித்ரவதை பற்றிய வீடியோ காட்சியை உண்மை என இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தகக்து.












Click it and Unblock the Notifications