Sri Lanka Floods: சூறாவளியில் தத்தளிக்கும் இலங்கை.. நிலச்சரிவு.. கடும் மழை.. 56 பேர் பலி- முழு விவரம்
இலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ள நிலையில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 28, 2025 அன்று வெளியான தகவல் படி, கடந்த வாரம் தொடங்கிய மோசமான வானிலை, வியாழக்கிழமை மேலும் தீவிரமடைந்தது. கனமழையால் வீடுகள், வயல்வெளிகள், சாலைகள் என யாவும் வெள்ளத்தில் மூழ்கின. நாடு முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகளும் நேர்ந்துள்ளன.
தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 300 கி.மீ (186 மைல்) தூரத்தில் உள்ள பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 25க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த இரண்டு மாவட்டங்களிலும் 21 பேர் காணாமல் போனதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் அரசு பேரிடர் மேலாண்மை மையம் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மற்ற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக, வெள்ளிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல சாலைகள் தடைப்பட்டுள்ளன. பல இடங்களில் பாறைகள், மண், மரங்கள் ஆகியவை சரிந்து சாலைகளிலும், ரயில் தண்டவாளங்களிலும் விழுந்ததால், பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும், சில இடங்களில் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை அன்று, வெள்ளத்தில் சிக்கி வீட்டின் கூரையில் தவித்த மூன்று பேரை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. கடற்படையினரும், காவல்துறையினரும் படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
அம்பாறை நகருக்கு அருகில் வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டு, அதில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்த காட்சிகள் வியாழக்கிழமை வெளியாகின. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடற்படை கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த், மீட்பு நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications