எல்லை தாண்டி மீன் பிடித்தால் அபராதம்.. மீனவர்களுக்கு எதிரான சட்ட மசோதாவை நிறைவேற்றியது இலங்கை
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை பிடித்து 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வழி வகை செய்யும் சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்களை தாக்குவதும், வலைகளை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இதன் உச்சமாக கடந்த மார்ச் மாதம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கடந்த வாரம் அறிவித்தார்.
அதன்படி, இன்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தில், எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் படிக்கப்பட்டாலும் அபராதம் விதிக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழக மீனவர்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.