இலங்கையில் புதிய குழப்பம்: உச்சநீதிமன்றத்தில் 2 தலைமை நீதிபதிகள்!!
கொழும்பு: இலங்கை உச்சநீதிமன்றத்தில் தற்போது 2 தலைமை நீதிபதிகள் பொறுப்பில் இருப்பதால் நீதித்துறையில் பெரும் குழப்பம் உருவாகி உள்ளது.
இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்க. இவர் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அவர் கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர்.
இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து சிராணியை பதவி நீக்கம் செய்தார் மகிந்த ராஜபக்சே. அவருக்குப் பதிலாக சிலோன் வங்கித் தலைவர் பொறுப்பில் இருந்த மொகான் பிரீஸை தலைமை நீதிபதியாக்கி இருந்தார் மகிந்த ராஜபக்சே.

இந்த மொகான் பிரீஸ்தான் ராஜபக்சே 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்று அனுமதி கொடுத்தவர். அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது ராஜபக்சேவுக்கு எதிராக சிராணி களமிறக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
பின்னர் மைத்ரிபால சிறிசேன பொதுவேட்பாளராக களம் இறங்க அவருக்கு சிராணி பண்டாரநாயக்க ஆதரவு தெரிவித்தார். அப்போது தாம் அதிபரானால் சிராணியை மீண்டும் தலைமை நீதிபதியாக்குவேன் என்று மைத்ரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனவும் தலைமை நீதிபதியான மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்கவும் மறுத்துவிட்டார். ஆனாலும் மொகான் பிரீஸ் அசைந்து கொடுக்காதவராக தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார். அவர் ராஜினாமா செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன.
இந்நிலையில் மைத்ரிபால அரசு இன்று சிராணி பண்டாரநாயக்க மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் அவரை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்துக்கு சென்ற சிராணி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் இலங்கையில் தற்போது 2 தலைமை நீதிபதிகள் என்ற அசாதரண சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மீண்டும் தலைமை நீதிபதியாகி இருக்கும் சிராணி நாளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ய உள்ளார். அவருக்குப் பதில் தலைமை நீதிபதியாக ஸ்ரீபவன் பதவியேற்க உள்ளார்.
மைத்ரிபால அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலக மறுத்து வரும் மொகான் பிரீஸ் ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications