”பொங்கல்” பண்டிகைக்காக தமிழக மீனவர்கள் 104 பேர் விடுதலை- இலங்கை அமைச்சர் தகவல்
கொழும்பு: இலங்கை சிறைகளில் உள்ள 104 தமிழக மீனவர்கள் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர். இவர்களையும் சேர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 104 மீனவர்கள் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்ய வலியுறுத்தல்:
இந்த 104 தமிழக மீனவர்களையும், அவர்களது 66 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், இலங்கையை தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு:
இந்த நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு தமிழக மீனவர்கள் 104 பேரையும் இலங்கை விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகின்த அமரவீரா இதை உறுதிபடுத்தும் விதமாக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
திருப்பி அனுப்புவோம்:
அதில் அவர், ‘‘தமிழக மீனவர்கள் 104 பேரையும் சிறைகளில் அடைத்து வைத்திருக்க இலங்கைக்கு விருப்பம் இல்லை. தமிழர் திருநாளான தைப்பொங்கலுக்கு முன்பு அவர்களை திருப்பி அனுப்ப விரும்புகிறோம்'' என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு ஆர்வமில்லை:
மகின்த அமரவீரா தலைமையிலான மீன் வளத்துறை, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் இதில் ஆர்வம் காட்டவில்லை.
படகுகள் கேள்விக்குறியே:
அவர்கள் தமிழர்களை விடுவிப்பது பற்றி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றாலும் இந்தியா கொடுக்கும் அழுத்தம் காரணமாக இதில் ஒரு முடிவு எடுக்க இலங்கை முன் வந்துள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் 104 தமிழக மீனவர்கள் விடுதலை ஆவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்களது 66 படகுகளை இலங்கை அரசு ஒப்படைக்குமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications