கொழும்பு துறைமுகம் அருகே இந்திய- இலங்கை போர்க் கப்பல்கள் கூட்டுப் பயிற்சி
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு அருகே இந்தியா- இலங்கை போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.
கொழும்புத் துறைமுகத்துக்கு 4 நாட்கள் பயணமாக இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐஎன்ஸ்எஸ் மைசூர் என்ற போர்க்கப்பலும் வருகை தந்திருந்தன.
இந்த போர்க்கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து நேற்று கூட்டு பயிற்சியில் ஈடுபட்டன. கொழும்புத் துறைமுகத்துக்கு வெளியே நடைபெற்ற இப்பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சயுர, சமுத்ர ஆகியவையும் மூன்று அதிவேகத் தாக்குதல் படகுகளும் இணைந்திருந்தன.
இந்த பயிற்சி நடவடிக்கைகள் சுமார் 5 மணிநேரம் நீடித்தது. இதன் பின்னர் இந்திய போர்க்கப்பல்கள், விசாகப்பட்டினத்துக்கு புறப்பட்டன.
முன்னதாக இந்திய போர்க்கப்பல்களில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஏறி பார்வையிட்டிருந்தார்.