முல்லைத்தீவில் பிரபாகரன் வாழ்ந்த பதுங்கு குழி தகர்ப்பு
யாழ்பாணம்: இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழியை அந்நாட்டு ராணுவம் வெடிவைத்துத் தகர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.
சுற்றுலா தலம்
அந்த பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் பிரபாகரன் தங்கி இருந்த பதுங்கு குழியை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். பூமிக்கு அடியில் பாதுகாப்புடன் கோட்டை போல் அமைக்கப்பட்டு இருந்த அந்த பதுங்கு குழியை ஏராளமான பேர் சென்று பார்த்து வந்தனர். இதனால் அது சுற்றுலா தலம் போல் விளங்கியது.
குண்டு வைத்து தகர்ப்பு
இந்த நிலையில், அந்த பதுங்கு குழியை நேற்று முன்தினம் மாலை 6.40 அணி அளவில் ராணுவத்தினர் குண்டு வைத்து தகர்த்தனர்.
முன்னதாக, பதுங்கு குழியில் ஏராளமான வெடிபொருட்கள் இருப்பதாக கூறி, சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் கோவில்களுக்கும் சென்று விடுமாறு ராணுவத்தினர் கேட்டுக் கொண்டனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். குண்டு வெடித்த சத்தம் பயங்கரமாக கேட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தகவலை கொழும்பு டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.
கோவில் ஆகிவிடுமாம்
பிரபாகரனின் பதுங்கு குழியை அந்த பகுதி மக்கள் கோவில் ஆக்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில், ராணுவம் அதை தகர்த்து விட்டதாக அங்குள்ள தமிழர் தலைவர்கள் தெரிவித்தனர்.
எனினும், பிரபாகரனின் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று ராணுவம் மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications