போரின்போது மாயமான தமிழர்கள் பற்றி இலங்கை கடற்படை அதிகாரியை விசாரித்த சிஐடி அதிகாரிகள்
கொழும்பு: இலங்கையில் நடந்த போரின்போது மாயமான தமிழர்கள் பற்றி அந்நாட்டு கடற்படை அதிகாரி ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடந்த போரின்போது தமிழர்கள் பலர் மாயமானார்கள். அதிலும் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ் வாலிபர்கள், அவர்களின் பெற்றோர் என ஏராளமான தமிழர்கள் கடத்தப்பட்டனர். மேலும் பலர் மாயமாகினர்.
தமிழர்கள் மாயமானதற்கு இலங்கை கடற்படை தான் காரணம் என்று கூறப்பட்டது. இது குறித்து கடந்த 2010ம் ஆண்டு புகாரும் அளிக்கப்பட்டது. ராஜபக்சே அதிபராக இருந்த வரை இந்த புகார் பற்றி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்ரிபால ஸ்ரீசேன அதிபர் ஆகியுள்ளார். அவர் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழர்கள் நலன் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போரின்போது தமிழர்கள் மாயமானது குறித்து இலங்கை சிஐடி அதிகாரிகள் கடற்படை அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடத்தியதாக எஸ்.பி. அஜித் ரோகனா தெரிவித்துள்ளார்.
போரின்போது ஏராளமான தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.