ஶ்ரீமாவோ, சந்திரிகாவைத் தொடர்ந்து இலங்கையின் 3-வது பெண் பிரதமரான ஹரிணி அமரசூரிய!
கொழும்பு: இலங்கையின் 3-வது பெண் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார் இலங்கையின் வரலாற்றில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, அவரது மகள் சந்திரிகா பண்டராநாயக்கவைத் தொடர்ந்து 3-வது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஹரிணி அமர சூரிய.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி தலைவரான அனுர குமார திசநாயக்க, தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2-வது இடத்தையும் ரணில் விக்கிரமசிங்கே 3-வது இடத்தையும் பெற்றனர்.

இதனையடுத்து இலங்கையின் 9-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பதவியேற்றார். அதேநேரத்தில் இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்தார்.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போதே, அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றால் ஹரிணி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க முன்னிலையில் ஹரிணி அமரசூரிய இன்று பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றார். இலங்கையின் வரலாற்றில் 3-வது பெண் பிரதமர் என்ற பெருமையையும் ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமராக பதவி வகித்த பெண்களாவர்.












Click it and Unblock the Notifications