தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை... இலங்கையில் வருகிறது புதிய சட்டம்!!
கொழும்பு: சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை நிகழ்த்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள் உள்பட 258 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலையடுத்து, இலங்கையில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு 9 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. மேலும், தீவிரவாத தாக்குதல்களின் தொடர்ச்சியாக, அங்கு முஸ்லீம்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவலால் அங்கு வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் அரங்கேறுவதாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், கலவர அபாயம் உள்ள பகுதிகளில் சமூக ஊடகங்களுக்கான தடை தொடர்ந்து அமலில் உள்ளது. சமூக ஊடகங்களை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இந்தநிலையில், பதற்றத்தை தணிக்கும் விதமாக, சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சமூக ஊடகங்களில் அவதுறான கருத்துக்கள் மற்றும் தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் இலங்கை ரூபாய் மதிப்பில் 1 மில்லியன் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இலங்கை சட்டத் துறை அமைச்சர் கொண்டு வந்த இந்த சட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இந்த சட்டம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. சிங்கப்பூரிலும் தவறான தகவல் பரப்பினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை தரும் சட்டத்தை சிங்கப்பூர் அரசு அமலுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.