இலங்கைச் சிறையில் இருந்து மேலும் 15 மீனவர்கள் விடுதலை!
இலங்கைச் சிறையில் உள்ள மேலும் 15 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு : இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேலும் 15 மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் தேடிச் சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம், நாகை, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்ற மீனவர்களை விடுவிப்பதோடு படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜூலை 27ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அப்துல் கலாம் மணி மண்டப திறப்பு விழாவின் போதும் மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் முதற்கட்டமாக 77 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனிடையே மேலும் 15 மீனவர்களையும் விடுதலை செய்வதாக இன்று இலங்கை அரசு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அனைத்து 92 மீனவர்களும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications