ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தலையிட ஐ.நா. மனித உரிமை ஆணையர் மறுப்பு
யாழ்ப்பாணம்: ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தலையிட தனக்கு அதிகாரம் இல்லை என்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்தபோது ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஜெய்த் த் ராத் அல் ஹுசேன் கூறியுள்ளார்.
இலங்கையில் நான்கு நாள் பயணமாக வந்துள்ளார் ஹூசேன். முதல் நாளான சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அனைத்து தரப்பினரையும் தான் சந்திக்கப் போவதாக கூறியிருந்தார்.
நேற்று அவர் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத் தீவுக்கு சென்றிருந்தார். அப்போது யாழ்ப்பாணத்தில் அவர் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், மாகாண ஆளுநர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

வடக்கு மாகாணப் பிரச்சினைகள்
விக்னேஸ்வரனைச் சந்தித்தபோது வடக்கு மாகாண பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது போரின் போது காணாமல் போனவர்கள், அவர்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விக்னேஸ்வரனிடம் கேட்டறிந்தார் ஹுசேன்.

பல ஆயிரம் பேர் மாயம்
ஈழத்தில் 2009ம் ஆண்டு முடிவடைந்த போரின் கடைசிக் கட்டத்தில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் காணாமல் போனார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

உறவினர்கள், குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்
நேற்று ஹூசேன் வருகையின்போது முதல்வர் விக்னேஸ்வரனின் அலுவலகம் அருகே காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் ஹூசேனை நேரில் சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டனர்.

நிலங்களைக் கொடுங்கள், உறவுகளை மீட்டுக் கொடுங்கள்
ஆணையரிடம் அங்குள்ள மக்கள் கூறுகையில், எங்களுக்கு எதுவுமே வேண்டாம். துறைமுகமோ, விமான நிலையமோ எதுவுமே தேவையில்லை. எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பக் கொடுங்கள். எங்களது உறவுகளை மீட்டுக் கொடுங்கள். வேறு எதுவும் தேவையில்லை என்று குமுறலுடன் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழர்களின் வீடுகளுக்கு விஜயம்
இந்த சந்திப்பின்போது சில வீடுகளுக்கும் ஹூசேன் சென்று தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தங்களது அவல நிலையை விவரித்து கண்ணீருடன் அவர்கள் ஹூசேனிடம் விளக்கினர்.

கைதிகள் விவகாரத்தில் தலையிட மறுப்பு
முன்னதாக ஹூசேனுடன் நடந்த சந்திப்பு குறித்து முதல்வர் விக்னேஸ்வரன் கூறுகையில், அரசியல் கைதிகள் விஷயத்தில் பொதுமன்னிப்பை விட வழக்கு விசாரணையை சரியான முறையில் நடத்தி அவர்களை விடுதலை செய்வது தான் சரியானதாக அமையும். அரசுக்கு அரசியல் கைதிகள் தொடர்பான விஷயங்களை கூறி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையரை கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அது தனது அதிகாரத்தில் இல்லை என்று ஹூசேன் கூறினாராம்.

கந்தசாமி ஆலயத்தில்
இந்த சந்திப்புக்குப் பிறகு நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு ஹூசேன் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று திரிகோணமலையில் சுற்றுப்பயணம் செய்கிறார் ஹூசேன்.












Click it and Unblock the Notifications