முஸ்லிம்கள் மீதான சிங்களர் வெறியாட்டம்: இலங்கைக்கு அமெரிக்கா அட்வைஸ்
கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் நடத்திவரும் கொடுந்தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் பேருவளை நகரில் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் புத்த துறவி ஒருவர் தாக்கப்பட்டார் என்று தகவல் வெளியானது. இதனையடுத்து, அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா டவுன் பகுதிகளில் முஸ்லிம்களுக்கும் சிங்களருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் முஸ்லிம்களை குறி வைத்து சிங்களர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து அகதிகளாகினர்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் எரிக்கப்பட்டு, சூறையாடப்பட்டன. இந்த தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்தி கலவரத்தை கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலவர பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, அனைத்து தரப்பு குடிமக்களின் உயிர், வழிபாட்டு தலங்கள் மற்றும் உடைமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரித்து கலவரத்துக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.