குஜராத் பாலம் விபத்து வழக்கு.. சிபிஐ விசாரணை அவசியம் இல்லை.. உச்சநீதிமன்றம் பரபர உத்தரவு!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 'மோர்பி' பாலம் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல இது ஒரு 'மிகப்பெரிய சோகம்' என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், இது குறித்து உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில் மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் குறித்து உயர்நீதிமன்றமே நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விபத்து வழக்கில் உரிய நேர்மையான விசாரணை தேவை என்றும் எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும் பாதிக்கப்பட்டவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விபத்து
குஜராத் மாநிலம் 'மோர்பி' நகரில் மிக பழமையான கேபிள் பாலம் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலத்தை அம்மாநில அரசு சமீபத்தில் புனரமைத்து கடந்த 26ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி புதியதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க அப்பகுதி மக்கள் அதிக அளவு குவிந்துள்ளனர். சுமார் 500க்கும் அதிகமானோர் வந்திருந்த நிலையில் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதில் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்பதற்குள் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கின. இந்த விபத்தில் மொத்தமாக 47 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர்.

சிபிஐ விசாரணை
வரும் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விபத்து மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அம்மாநில உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்நிலையில், இந்த விபத்தில் தனது சகோதரர் உட்பட இரண்டு உறவினர்களை இழந்த நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களுக்கு கௌரவமான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மிகப்பெரிய சோகம்
விசாரணையில் இந்த விபத்து 'மிகப்பெரிய சோகம்' என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால் இதில் தாங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லையென்று கூறியுள்ளனர். மேலும், ஒருவேளை இவ்வாறு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாவிடில் நாங்களே விசாரணை எடுத்துக்கொண்டிருப்போம் என்றும் மனுதாரருக்கு விளக்கமளித்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், வழக்கு தொடர்பாக சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வழிகாட்டுதல்
அப்போது பதிலளித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "பாலம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, பாலத்தை புனரமைத்தது, பராமரிப்பு பணிகளை உண்மையாகவே யார் மேற்கொண்டது? மற்றும் விபத்துக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றை குறித்து உயர்நீதிமன்றம் வாராந்திர கண்காணிப்பை மேற்கொள்ளும்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து மேற்குறிப்பிட்ட காரணத்தை சுட்டிக்காட்டி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல இதே கோரிக்கையை உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்யலாம் என்றும் வேறு ஏதேனும் முறையீடுகள் இருப்பின் உச்சநீதிமன்றத்தை தாராளமாக அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications