வருத்தம் தெரிவிக்காத பிடிவாதக்காரர் சூர்யா: ஏன் ஆதரிக்கிறீர்கள்? பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் கேள்வி
ஜெய்பீம் சர்ச்சை எழுந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் மோதல்கள் நடந்து வருகிறது. பாமகவினர் கோபம் அதனால் வழக்குகள், புகார்கள் என ஒருபக்கம், அன்புமணி ராமதாஸ் கடிதம் அதற்கு சூர்யாவின் பதில், சூர்யாவுக்கு ஆதரவாக அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம் எழுத அதற்கு அன்புமணி சூடாக பதிலளிக்க தற்போது இந்தப்பிரச்சினையில் தேவையில்லாமல் பாரதிராஜா சப்போர்ட் செய்வதாக தயாரிப்பாளர் எம்.10 புரடக்ஷன்ஸ் முருகராஜ் என்பவர் பாரதிராஜாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பச்சை துரோகம்.. வஞ்சகரின் காசு இது.. ஜெய்பீம் டீமுக்கு கண்மணி குணசேகரன் கொடுத்த ஷாக்
ஜெய்பீம் சர்ச்சை
ஒடுக்கப்பட்ட இருளர் குடும்பம் போலீஸ் நரவேட்டையில் பாதிக்கப்படுவதும், அதற்கு ஆதரவாக வழக்கறிஞர் சந்துரு நிற்பதும் என உண்மைச் சம்பவத்தை தழுவி மாற்றங்களுடன் எடுக்கப்பட்ட ஜெய்பீம் படத்தில் கொலைகார எஸ்.ஐக்கு வன்னியர் முத்திரை எப்படி குத்தலாம் என்று வன்னியர் சங்கத்தினர் கோபப்பட சூர்யா மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிற கோரிக்கையும் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
பதிலளிக்காத சூர்யா
படத்தில் வைக்கப்பட்ட பிரச்சினைக்குரிய காட்சியை நீக்கியது படக்குழு ஆனால் மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது ரூ.5 கோடி இழப்பீடு என்று அனுப்பிய நோட்டீஸுக்கு சூர்யா பதிலளிக்கவில்லை. பின்னர் இந்தப்பிரச்சினையில் சூர்யாவுக்கு ஆதரவாக தெ இந்திய திரைப்பட சங்கம், நடைகர் சங்கத்துணை தலைவர் கருணாஸ், பாரதிராஜா, இயக்குனர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். பாரதிராஜா ஒருபடி மேலே போய் கடிதமே எழுதினார்.
பாரதிராஜாவை விமர்சிக்கும் சமூக வலைதளங்கள்
பாரதிராஜா இப்பிரச்சினையில் தலையிட்டதால் அவர் படவிழாவில் ஒரு சமூகத்தைப்பற்றி பேசியதையும் எடுத்துப்போட்டு விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பாரதிராஜாவை எம்.10 புரடக்ஷன்ஸ் முருகராஜ் என்பவர்கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார். மன்னிப்பு கேட்டால் பிரச்சினை ஓய்ந்துவிடும் ஆனால் வருத்தம் தெரிவிக்காத வறட்டு பிடிவாதக்காரர் சூர்யாவுக்கு சப்போர்ட் செய்து தேவையில்லாமல் தயாரிப்பாளர்களை இதில் இழுத்துவிடுகிறீர்கள் என கடுமையாக சாடியுள்ளார்.
அவரது கடிதம் வருமாறு :
நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு, வணக்கம், ஒரு சிறந்த கலைஞனின் படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்று கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும் அதை சீர்குலைக்காமல் இருப்பது ஒவ்வொரு கலைஞனின் தார்மீக கடமை. என்பதை வேதம் புதிது எடுத்த தலைவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
வருத்தம் தெரிவிக்காமல் ஒருவார காலமாக சுய விளம்பரம்
தமிழகத்தில் உள்ள பெரும் மக்கள்தொகை கொண்ட ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரித்து படம் எடுத்ததை கண்டித்து அந்த சமுதாய தலைவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லாமல் குறைந்த பட்ச வருத்தம் கூட தெரிவிக்காமல் ஒருவார காலமாக தன் படத்திற்கு சுய விளம்பரம் தேடிக்கொண்டிருக்கும் சூர்யா தயாரிப்பாளர் சங்கத்தினால் கண்டிக்க தக்கவரே ஒழிய ஆதரவு தரும் அளவிற்கு சிறந்த பண்புள்ள பதிலை சூர்யா அந்த மக்களுக்கு கூறவில்லை.
நாளை சிறுபான்மை சமூகத்திற்கும் இதே நிலை வரும்
சினிமா தொழில் செய்யும் நமக்கு பார்வையாளர்கள்தான் முதலாளிகள். அப்படிப்பட்ட முதலாளிகளில் ஒரு பகுதியினரின் மனதை புண்படுத்துவது எவ்வகையான நியாயம்..? பெரும்பாண்மை சமுதாயத்தையே தவறாக சித்தரித்து படம் எடுக்க படும் எனில் நாளை சிறுபான்மை சமுதாயத்திற்கும் இதே நிலை வராது என்பதற்கு உத்திரவாதம் உங்களால் தர முடியுமா..?
நாளை சூர்யாவின் சாதியையோ அல்லது அவருக்கு ஆதரவாக இருப்பவர்களின் சாதியையோ படைப்பு சுதந்திரம் எனும் பெயரில் தவறாக சித்தரித்து ஒரு படைப்பு வரும் பட்சத்தில் அது தமிழ் சமூகங்களுக்கு இடையேயான சாதிய கலவரங்களுக்கு வழி வகுக்கும் அபாயம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் சூர்யா புரிந்துகொள்ள வேண்டும்.
சுதந்திரம் என்கிற பெயரில் சாலையில் நிர்வாணமாக நடக்க முடியுமா?
சுதந்திரம் என்ற பெயரில் ரோட்டில் நிர்வாணமாக நடப்பது இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அசிங்கமோ அது போன்ற அசிங்கம்தான் சூர்யா குறிப்பிடும் படைப்பு சுதந்திரம். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயருடன் உருவான ஜெய்பீம் எனும் ஆக சிறந்த படைப்பில் பெரும் விஷம் கலந்த குறியீடுகளும் புனைவு பெயர்களும் எதற்காக..?
இலையின் ஓரம் நரகல்
சிறந்த படைப்பை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டாம் என்று சிலரது பதிவுகளை பார்த்தேன். இலை நிறைய பல வகை உணவுகளை விருந்து வைத்து இலையின் ஓரத்தில் அசிங்கத்தை வைத்தால் அதை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் மூக்கை மூடிக்கிட்டு சாப்பிடகூடியவர்கள் சொல்லும் பதிலாக வேண்டுமானால் அது இருக்கலாம். ஆனால், வேதம் புதிது கண்ட இயக்குனர் இப்படி சொல்வதுதான் வருத்தமளிக்கிறது.
சப்பைக்கட்டு கட்டும் படக்குழு
குறியீடுகளை நீக்கிவிட்டோம் என்று சப்பைகட்டு கட்டுவது சிறந்த கலைஞனின் சிறந்த பண்பு அல்ல. தயாரிப்பாளர், கதாநாயகன் என யாருடைய பார்வையிலும் படாமல் டெக்னீஷியன்களால் ஒரு தவறு நடந்துவிட்டது என்பதை சினிமா தெரியாதவர்கள் வேண்டுமானால் ஏற்று கொல்லலாம். ஆனால் ஒரு தயாரிப்பாளராக அதை நான் ஏற்க மாட்டேன்.
கார்பரேட் கம்பெனிக்கு ஆதரவானவர் சூர்யா
திரையரங்குகளில் மக்களின் கொண்டாட்டங்களினால் உயர்ந்து வந்த நடிகர் சூர்யா, நம் திரைப்படத்துறையின் ஒரு அங்கமான வினியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தன் தயாரிப்பில் 5 படங்களை கொடுக்காமல் கார்ப்பரேட் கம்பெனிக்கு கொடுத்த கார்ப்பரேட் கைகூலியான நடிகர் சூர்யாவிற்கு திரைப்படத்துறை ஆதரவு என்பது வினியோகஸ்தர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.
நியாயமற்ற முறையில் துணை நிற்பது சரியல்ல
ஒருவாரகாலம் அந்த குறியீடு பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வந்த பிறகு அதற்காக மன்னிப்பு கேட்பது அல்லது அதற்கு வருத்தம் தெரிவிப்பது என்பதுதான் விவாதங்கள் இல்லா சுமுகமான முடிவாக இருக்கும் என்பது நடிகர் சூர்யாவிற்கும் தெரியும் இருந்தும் ஏனோ அதை செய்ய மறுக்கிறார். அவரது சுய லாபத்திற்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் நியாயமற்ற முறையில் துணை நிற்பது வருத்தமளிக்கிறது"
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.