நடுவானில் செய்யும் காரியமா.. கண்ணை மூடிய பயணிகள்.. புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்! என்னாச்சு
சிட்னி: விமானம் புறப்பட்டு நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமான பயணி ஒருவர் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக சென்று விமானி அறையின் கதவை தட்டியதோடு.. விமானத்தை திருப்ப வேண்டும் என அடம் பிடித்துள்ளார். இதனால் முன்னெச்சரிக்கையாக விமானம் புறப்பட்ட இடத்திற்கே திருப்பி விடப்பட்டது.
சமீப காலமாக விமானத்திற்குள் பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் விதமான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. குடிபோதையில் விமானத்திற்குள் ரகளை செய்வது.. பயணிகளுக்கு இடையே சண்டை போடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று விமானத்திற்குள் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக பயணி ஒருவர் ஓடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து மெல்போர்னுக்கு விர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் திடீரென பயணி ஒருவர் தனது ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக விமானி அறை நோக்கி ஓடினார். அங்கிருந்த ஜன்னலை தட்டி விமானத்தை திருப்புமாறு சொல்லிக்கொண்டே இருந்தார்.
விமானப்பயணி திடீரென நிர்வாண கோலத்துடன் விமானத்திற்குள் ஓடியதை பார்த்த சக பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இதையடுத்து, உடனடியாக விமானம் பெர்த் நகருக்கே திருப்பி விடப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், விமான நிலையத்தில் தயாராக இருந்த போலீசார், குறிப்பிட்ட அந்த பயணியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சமபவம் குறித்து விர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெர்த் நகரில் இருந்து மெல்போர்னுக்கு கடந்த திங்கள் கிழமை இரவு 7.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. மூன்று மணி நேரம் பயணம் கொண்ட இந்த விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பயணி ஒருவர் இடையூறு செய்தார்.
இதனால் பாதுகாப்பு கருதி விமானம் திருப்பி விடப்பட்டது. ஆஸ்திரேலிய மத்திய போலீசாரிடம் விமானத்திற்குள் இடையூறு செய்த நபர் ஒப்படைக்கப்பட்டார்” என்றனர். ஆஸ்திரேலிய மத்திய போலீசின் செய்தி தொடர்பாளர் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "பெர்த் விமான நிலையத்தில் விமான ஊழியரிடம் உதவி கேட்டு அழைப்பு வந்தது.
இதையடுத்து, விமானத்தில் இடையூறு செய்த நபர் பிடிக்கப்பட்டார். அவரது மனநலம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அந்த நபர் மீது இன்னும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை. வரும் ஜூன் 14 ஆம் தேதி நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராக சம்மன் விடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.












Click it and Unblock the Notifications