விலகிய மர்மம்! 120 ஆண்டுகளுக்கு முன் மாயமான கப்பல் கண்டுபிடிப்பு.. கொஞ்சம் கூட சேதம் ஆகலயே! வியப்பு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. தற்போது 120 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பல் கொஞ்சம் கூட சேதம் அடையாமல் இருப்பதை கண்டு ஆய்வாளர்கள் வியப்பிற்குள்ளாகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு கடந்த 1904 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. 240 அடி நீளம் கொண்ட இந்த பிரமாண்ட சரக்கு கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. நியு சவுத்வேல்ஸ் கடல் பகுதியில் மாயமான எஸ் எஸ் நெம்சிஸ் என்ற இந்த நீராவி கப்பலை தேடும் பணியானது நடைபெற்றது.

அடுத்த சில நாட்களில் கப்பலில் பயணம் செய்த சிப்பந்திகள் இறந்த நிலையில் சடலமாக கரை ஒதுங்கினர். ஆனால், கப்பல் எந்த இடத்தில் மூழ்கியது.. கப்பல் எங்கே கிடக்கிறது என்ற மர்மம் விலகவில்லை. பல ஆண்டுகளாக கப்பலை தேடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், கப்பலை கண்டுபிடிக்க முடியாததால் தேடும் பணியை பிறகு கைவிட்டனர்.
120 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பல்: இந்த நிலையில், கப்பல் மூழ்கி 120 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் மாயமான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிட்னி கடலோர பகுதியில் நீரில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் புரெஸ்சினல் மரைன் சர்வீஸ் என்ற நிறுவனம் ஈடுபட்டு இருந்தது. இந்த கப்பலை தேடும் பணியில் தேடும் நிறுவனம் ஈடுபட்ட போதுதான்.. 120 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் 525 அடி ஆழத்தில் கிடந்த கப்பல்.. 120 ஆண்டுகள் ஆகியும் அப்படியே கிடந்ததை கண்டு ஆய்வாளர்கள் வியப்பு அடைந்தனர். எனினும், கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் எஸ் எஸ் நெமிசிஸ் -தானா என்பதை ஆஸ்திரேலிய அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை இந்த கப்பலை படம் பிடித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

சில நிமிடங்களில் நடந்து இருக்கும்: இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கடலில் வீசிய கடுமையான புயலில் சிக்கி கப்பல் என்ஜின் நீரில் மூழ்கியதால் கப்பல் அங்கேயே நின்று இருக்கலாம் என கருதுகிறோம். அடுத்தடுத்த பெரிய அலைகளில் சிக்கி இந்தக் கப்பல் முழுவதும் அப்படியே கடலுக்கடியில் சென்று இருக்கலாம். சில நிமிடங்களில் இது நடைபெற்று இருக்க கூடும்.
இதனால், கப்பலின் சிப்பந்திகளுக்கு உயிர் காக்கும் படகுகளை எடுத்து தப்பித்து செல்ல நேரம் கிடைத்து இருக்காது” என்றனர். 120 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக நம்பப்படும் நிலையில், கப்பல் விபத்தில் பலியான சிப்பந்திகளின் குடும்ப உறுப்பினர்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications