"மூன்றாவது கண்.." ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளை உளவு பார்க்கும் சீனா? உடனே நீக்குங்க.. பறந்த உத்தரவு
"மூன்றாவது கண்.." ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளை உளவு பார்க்கும் சீனா? உடனே நீக்குங்க.. பறந்த உத்தரவு
சிட்னி: ஆஸ்திரேலியா அரசியல்வாதிகளின் அலுவலகங்களில் இருக்கும் சீன தயாரிப்பு சிசிடிவி கேமராக்களை அந்நாட்டு அரசு உடனடியாக அகற்றி வருகிறது. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.
அமெரிக்கா, இந்தியா என பல்வேறு உலக நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே இப்போது நல்ல ஒரு உறவு இல்லை.. உலக வல்லரசுகளைச் சீனா உளவு பார்க்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாகவே உள்ளன.
சமீபத்தில் சீனாவுக்குச் சொந்தமான பலூன் ஒன்றும் அமெரிக்காவுக்கு மேல் பறந்தது. இதைச் சீன வானிலை சார்ந்த பலூன் என்றாலும் கூட, இது உளவு பலூன் தான் என்றும் உளவு பார்க்கும் கருவிகள் அதில் இருந்ததாகவும் அமெரிக்கா கூறியது.

ஆஸ்திரேலியா
இதையடுத்து அந்த வெள்ளை நிற பலூனையும் அவர்கள் சுட்டு வீழ்த்தினர். ஏற்கனவே, அமெரிக்காவில் டெலிகாம் துறையில் சீன நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளுடனும் சீனாவுக்கு மோதல் போக்கே நிலவி வருகிறது. பல ஆண்டுகள் சீனாவுடன் நல்லுறவை வைத்திருந்த ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கூட சில ஆண்டுகளாக மோதல் போக்கே நிலவி வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் சீனா உளவு பார்க்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சிசிடிவி கேமராக்கள்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாதுகாப்பு காரணங்களால் சீன கேமராக்களை அகற்றவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி, ஆஸ்திரேலியா அரசியல்வாதிகளின் அலுவலகங்களில் இருந்து பல சீனத் தயாரிப்பு சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. அங்குள்ள பாதுகாப்புத் துறை கட்டிடங்கள் தொடங்கி 250க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய அரசாங்க கட்டிடங்களில் 913 சீன சிசிடிவி கேமராக்கள் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அகற்றம்
தனது துறையின் கட்டிடங்களில் இருக்கும் அனைத்து சீன கேமராக்களும் அகற்றப்படும் என்றும் தங்கள் கட்டிடங்களில் 100% பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கட்டிடங்களில் இருந்தும் 65 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஆஸ்திரேலிய அரசு படிப்படியாக அகற்றி வருகிறது.

உலக நாடுகள்
அனைத்து கேமராக்களும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முற்றிலுமாக மாற்றப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அந்த சிசிடிவி கேமராக்கள் எதுவும் இணையத்தில் இணைக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகவே அவை நீக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கூட இதேபோல சீன தயாரிப்பு சிசிடிவி கேமராக்களை தங்கள் நாட்டுக் கட்டிடங்களில் இருந்து அகற்றியது நினைவுகூரத்தக்கது. சீன நிறுவன கேமராக்களை அகற்றும் அனைத்து நாடுகளும் தரும் விளக்கம் ஒன்றுதான்.

மூன்றாவது கண்
மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களை வைத்து சீனா உளவு பார்க்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதாவது சீன சட்டப்படி, அனைத்து நிறுவனங்களும், அவை தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் கூட அதன் டேட்டாக்களை சீன அரசு கேட்டால் பகிர்ந்தே தீர வேண்டும். இதன் காரணமாகவே உலக நாடுகள் சீன சிசிடிவி கேமராக்களில் இருந்து தள்ளியே நிற்கின்றன. சீனாவின் போலி பிரசாரத்திற்கு உதவுவதாகக் கூறி சிசிடிவி தயாரிப்பு நிறுவனங்களான ஹிக்விஷன் மற்றும் டஹுவாவௌ அமெரிக்கா முற்றிலுமாக தடை விதித்துள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன்
அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்துள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டு நவம்பரில் இந்த இரண்டு நிறுவனங்கள் தயாரித்த அனைத்து கண்காணிப்பு உபகரணங்களையும் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை செய்தது.. அதேநேரம் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளன.இருப்பினும், உலக நாடுகள் சீனா சொல்வதை நம்பத் தயாராக இல்லை. இதன் காரணமாகவே இப்போது ஆஸ்திரேலியா இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.. ஆஸ்திரியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, தனது நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் பாகுபாடு காட்டுவது சரியான போக்கு இல்லை என்றும் சாடியுள்ளது.












Click it and Unblock the Notifications