ஆர்.கே. நகர் தொகுதியில் தயார் நிலையில் 1,200 வாக்குப் பதிவு எந்திரங்கள்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலலை முன்னிட்டு 1200 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 1,200 வாக்குப் பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனுதாக்கல் , பிரசாரம் என களைக் கட்ட தொடங்கியுள்ள இந்த இடைத்தேர்தலில் ஆறு முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக இறங்கியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இடைத்தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் புளியந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் தயார் நிலையில் உள்ளன.
டெல்லியிலிருந்து தேர்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வருகை தந்து வாக்குப் பதிவு எந்திரங்களை சரிபார்த்து சான்றிதழ் அளி்ப்பர். வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்படும்.
வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிக்குபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.