மோடி மாநாட்டுக்கு இதுவரை ஒன்றரை லட்சம் பேர் புக்கிங்.. வானதி சீனிவாசன் தகவல்
சென்னை: திருச்சியில் நாளை நடைபெறவுள்ள நரேந்திர மோடி பங்கேற்கும் இளம் தாமரைக் கூட்டத்திற்கு இதுவரை ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாக ஒன்றரை லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக மாநாட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நாளை நடைபெறவுள்ள மோடி மாநாட்டில் பங்கேற்க ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது பதிவு நடந்து வருகிறது. நேரடியாகவும் பலர் பதிவு செய்து வருகின்றனராம்.
மோடியின் முதல் தமிழக கூட்டம்
இதுதான், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் மோடி பங்கேற்கும் முதல் தமிழகக் கூட்டம் ஆகும்.
திருச்சி ஜவஹர் மைதானத்தில்
நாளை திருச்சி ஜவஹர் மைதானத்தில் நடைபெறும் இளம் தாமரை மாநாடு என்ற பெயரிலான பாஜக மாநில இளைஞர் அணி கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
ராஜ்நாத் சிங்கும் வருகிறார்
இந்த மாநாட்டில் தேசிய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
விறுவிறுப்பான முன்பதிவு
மாநாட்டில் பங்கேற்பவர்களை உறுதி செய்ய முன்பதிவு செய்வதற்காக www.modiintamilnadu.com என்ற இணையதளம் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதுவரை ஒன்றரை லட்சம் பேர் பதிவு
இணையதளம் மூலம் 50,000 பேரும், விண்ணப்பப் படிவங்கள் மூலமாக 1 லட்சம் பேர் என மொத்தம் ஒன்றரை லட்சம் இதுவரை முன்பதிவு செய்துள்ளதாக மாநாட்டுப் பொறுப்பாளர்கள் குழுவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
ஒரே மேடையில் மோடியும், அத்வானியும்
இதற்கிடையே, இன்று போபாலில் நடைபெறும் மத்திப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடியும், அத்வானியும் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசவுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பாஜக ஆட்சி நிலவுகிறது.
3 போட்டியாளர்கள்
இன்றைய கூட்டத்தில் விசேஷம் என்னவென்றால் பிரதமர் வேட்பாளர் போட்டியில், மோடியின் கடும் போட்டியாளராக இருந்தவர் அத்வானி. அதேபோல மோடிக்கு நெருக்கடி கொடுப்பவராக கருதப்பட்டவர் செளகான். இவருக்கும் பாஜக மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இப்போது மோடி, அத்வானி, செளகான் ஆகிய மூவரும் ஒரே மேடையேறவுள்ளனர்.