மாதந்தோறும் 40 குழந்தைகள் பலி - 4 வருடங்களில் 1560 பேர் மரணம்... "ஷாக்" தரும் தர்மபுரி!
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாதந்தோறும் 40 பச்சிளம் குழந்தைகள் வரை மரணிப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் டீன் (பொறுப்பு) டாக்டர். எம்.இளங்கோ.
கடந்த பத்து மாதங்களில் மட்டும் 450 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனவாம்.
மாதந்தோறும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் 450 முதல் 550 பச்சிளம் குழந்தைகள் பலவித சிக்கல்களால் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். எடைகுறைவு, மூளை வளர்ச்சி, நுரையீரல் பாதிப்பு, ஆகிய கோளாறுகளினால் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 40 குழந்தைகள் வரை மரணிப்பதாக டாக்டர் இளங்கோவன் கூறியுள்ளார். இது சகஜமான ஒன்றுதான் என்பதுபோல ஒரு அதிர்ச்சி தகவலை போகிற போக்கில் கூறியுள்ளார்.

13 குழந்தைகள் மரணம்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 13 குழந்தைகள் மரணிக்கவே தமிழகம் முழுவதும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஊடகங்கள் அலறவே, விழித்துக்கொண்ட அரசு மருத்துவகுழுவினரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.

ஊடகங்கள் பெரிதுபடுத்துவதா?
ஆய்வு செய்த தமிழக மருத்துவக்கல்வி இயக்குனரக இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி, குழந்தைகள் மரணத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக கூறினார். அதோடு பெரிய பட்டியலையும் தெரிவித்தார்.

எத்தனை குழந்தைகள் மரணம்
இந்தியாவில், 1,000 குழந்தைகளுக்கு, 21 குழந்தைகள் இறக்கின்றன. தமிழகத்தில், 1,000 குழந்தைகளுக்கு, 15 குழந்தைகளே இறக்கின்றன. அதுவும், பிறந்து, நான்கு வாரத்துக்கு பின் தான்.குழந்தைகள் இறப்பை கட்டுப்படுத்துவதில், கேரளா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில், தமிழகம் உள்ளது என்று கூறியுள்ளார்.

எடைகுறைவான குழந்தைகள்
கடந்த, ஆறு மாதத்தில், இங்கு, ஒரு கிலோ எடையில், 34 குழந்தைகளும், ஒன்று முதல் ஒன்றரை கிலோவில், 127 குழந்தைகளும், ஒன்றரை கிலோ முதல், இரண்டரை கிலோ வரையில், 1,057 குழந்தைகளும் பிறந்துள்ளதாக கூறினார். 15 பச்சிளம் குழந்தைகள் இறப்பு என்பதை, ஒற்றை இலக்கத்தில் கொண்டு வருவதற்கான, அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளோம்.

இங்கு பிறக்கவில்லை
இங்கு இறந்த, 11 குழந்தைகளில், மூன்று மட்டுமே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து இறந்தன. மற்ற, எட்டு குழந்தைகள், தனியார் மற்றும் பிற அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, கடைசி நேரத்தில், இங்கு கொண்டு வந்ததால், அந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

எதனால் மரணம்
பெரும்பாலும், தாய்க்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்காதது; ரத்த அளவு குறைந்திருப்பது; தாய் எடை குறைவாக இருப்பது; இளம்வயது திருமணம் போன்றவற்றாலே, குழந்தைகள் இறக்க நேரிடுகின்றன.

நிக்கு
இறந்த குழந்தைகள், 1.25 கிலோ முதல் 2 கிலோ வரையிலே உள்ளன. அதற்கென உள்ள, 'நிக்கு' எனும் தீவிர சிகிச்சைப் பிரிவு அரங்கில், இங்குபேட்டர், வார்மர், வென்டிலேட்டர் ஆகியவற்றில் வைத்து பாதுகாக்கிறோம் என்றார்.

கர்ப்பிணி தாய்மார்கள்
நாங்களும் முடிந்தவரை, குழந்தைகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு, இரும்பு சத்து மாத்திரை ஆகியவை, சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், கிராமப்புற கர்ப்பிணிகளின் உடல் நிலையை பரிசோதித்து வருகின்றனர் என்று மருத்துவர்கள் கூறினாலும் குழந்தைகளின் மரணம் குறைந்தபாடில்லை. ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.

நான்கு ஆண்டுகளில்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆண்டுக்கு ஆண்டு குழந்தைகளின் மரணம் அதிகரித்து வருகிறது. 2011ஆம் ஆண்டு 270 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை மட்டும் 445 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

எத்தனை குழந்தைகள் மரணம்
கடந்த 2011ஆம் ஆண்டு 2,350 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 270 குழந்தைகள் மரணித்துள்ளன. 2012ஆம் ஆண்டு 3,632 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 374 குழந்தைகள் மரணித்துள்ளன.

தர்மபுரியிலேயே இத்தனை பேர் என்றால்
2013ஆம் ஆண்டு பிறந்த 4155 குழந்தைகளில் 458 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 2014 ஆம் ஆண்டு அக்டோபர் வரை பிறந்த 4143 குழந்தைகளில் 445 குழந்தைகள் மரணித்துள்ளதாக தெரிவிக்கிறது தர்மபுரி அரசு மருத்துவமனை பதிவேடு. தர்மபுரியில் மட்டுமே இத்தனை குழந்தைகள் மரணித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இன்னும் எத்தனை குழந்தைகள் மரணித்துள்ளனரோ என்று பதை பதைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு
இதற்கு காரணம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவுதான் என்பது டாக்டர்களின் கருத்தாக உள்ளது. கர்ப்ப காலத்தில் சரியான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாததே குழந்தைகள் எடைகுறைவோடும், குறையோடும் பிறக்க காரணமாகிவிடுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் மருத்துவர்கள்.

மருத்துவர்களும் காரணம்தானே?
குழந்தைகளின் மரணத்திற்கு ஊட்டச்சத்து குறைபாடு, நோய் தாக்குதல், எடைகுறைவு என மருத்துவர்கள் சப்பை கட்டு கட்டினாலும் பிறந்த குழந்தைகளின் உயிரை பாதுகாக்க வேண்டியது மருத்துவர்களின் கடமைதான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications