சென்னை வந்த சிங்கப்பூர் விமானத்தில் மஞ்சள் பையில் கிடந்த 1.6 கிலோ தங்கம்!
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த, 1.6 கிலோ தங்க நகைகளை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி விமான நிலையங்களில் அவ்வப்போது கடத்தல் தங்கம் பிடிபடுகிறது.

இந்நிலையில் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில், பயணிகள் சென்ற பின் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இருக்கையின் கீழே கேட்பாரற்ற நிலையில், மஞ்சள் பை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் வெடிகுண்டு ஏதும் இருக்குமோ என்ற சந்தேகத்தில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விமானத்தில் சோதனை செய்த அதிகாரிகள், கேட்பாரற்றுக் கிடந்த அந்த மஞ்சள் பையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. அந்தப் பையை கைப்பற்றிய அதிகாரிகள் தங்கத்தின் மதிப்பை அளவிட்டனர்.
அதில், 1.6 கிலோ எடை கொண்ட தங்கம் அந்தப் பையில் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு 48 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் சுங்கத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து காலை 9 மணிக்கு சென்னை வந்த அந்த விமானம், பத்தரை மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்லும் என்பதால், யாரேனும் தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் என்ற கோணத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications