அதிமுகவில் 10,000 பேர்! எடப்பாடியை அழைத்து பிரம்மாண்ட விழா! தேதி கேட்கும் அய்யாதுரை பாண்டியன்!
தென்காசி: அண்மையில் அதிமுகவில் இணைந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியை தென்காசிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட விழா நடத்தி அதில் 10,000 பேரை அதிமுகவில் இணைப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் திமுகவில் வர்த்தகர் அணியில் மாநில பொறுப்பில் இருந்ததால் அதிமுகவிலும் முக்கியப் பொறுப்பு பெறுவதற்காக அவர் காய் நகர்த்தி வருகிறார்.
இதனிடையே அய்யாதுரை பாண்டியன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு அதிமுகவில் முக்கியப் பதவியை கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தக்க பதிலடி கொடுக்கவும் எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அய்யாதுரை பாண்டியன்
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான அய்யாதுரை பாண்டியன் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தான் அதிமுகவில் இணைந்தார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்த இவர், அதிமுக சார்பில் தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தலைமையின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதனிடையே எல்லாவற்றுக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமியை தென்காசிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட விழா ஒன்றையும் நடத்த ஆர்வம் காட்டி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கும் விதமாக தான் அவரது சமுதாயத்தை சேர்ந்த அய்யாதுரை பாண்டியனை அதிமுகவுக்கு அழைத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் இணைந்து மூன்று மாத காலமாகியும் அய்யாதுரை பாண்டியனுக்கு இன்னும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனிடையே தனக்கு பொறுப்பு கிடைத்தவுடன் எடப்பாடி பழனிசாமியை தென்காசிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை நடத்தி அதில் 10,000 பேரை அதிமுகவில் இணைப்பதற்கு திட்டம் வகுத்து வைத்திருக்கிறாராம் அய்யாதுரை பாண்டியன்.

முக்கியப் பதவி
அய்யாதுரை பாண்டியன் பெயரில் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் ஒரு தனிப்பேரவையே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தை மாதத்தில் அதிமுகவில் பலருக்கும் புதிய பொறுப்புகள் கொடுக்க திட்டமிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அய்யாதுரை பாண்டியனுக்கு மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ ஏதேனும் முக்கியப் பதவிகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முக்குலத்தோர் சமுதாய பிரமுகர்களை தாங்கள் ஒதுக்கவில்லை என்ற பிம்பத்தை கட்டமைக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு நம்புகிறது.

பல லட்சங்கள்
அதிமுகவில் இணைந்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆகக் கூடிய நிலையில், அக்கட்சிக்காக அய்யாதுரைபாண்டியன் பல லட்சங்களை வாரி இறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் குஜராத்தில் மின் உற்பத்தி தொடர்பான தொழில் செய்தவர் அய்யாதுரை பாண்டியன் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications