சென்னையில் 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 10 பேர் படுகாயம்
சென்னை: சென்னை, பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலையில் ஒரு அரசுப் பேருந்து கிளம்பியது. அதேபோல பாரிமுனை பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த இன்னொரு அரசுப் பேருந்து ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதைக்குள் நுழைந்தது. பாரிமுனையில் இருந்து வந்த பேருந்து சுரங்கப்பாதைக்கு இறங்கிய போது திடீரென எதிரே வந்த பேருந்து மீது மோதியது.
இதில் இரு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 10 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ரிசர்வ் அங்கே உள்ள சுரங்கப்பாதையில் அடிக்கடி பேருந்து விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்தனர். பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.