பரிசல் மூழ்கி 6 பேர் பலியான வழக்கு.. பரிசல் ஓட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை
ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த 6 பேர் பலியான வழக்கில் பரிசல் ஓட்டிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தர்மபுரி: கடந்த 2015ல் ஒகேனக்கலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகியனர். இந்த வழக்கில் படகை ஓட்டியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்பட அவரது உறவினர்கள் 9 பேர் ஒரே குடும்பத்தினர் கடந்த2015ல் முருகேசன் என்பவரது பரிசலில் ஒகேனக்கலில் பயணம் செய்தனர். அப்பொழுது மணல்திட்டு என்ற பகுதியில் அதிக பாரம் காரணமாக முருகேசனின் கட்டுப்பாட்டை இழந்த பரிசல் தண்ணீரில் மூழ்கியதில் கிருஷ்ணமூர்த்தி, கவுரி, தர்ஷன், கோகிலா, ரஞ்சித்குமார், சுதிக்க்ஷா ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பரிசல் ஓட்டி முருகேசன் ஆற்றில் குதித்து உயிர் தப்பினார். மற்ற மூன்று பயணிகளும் மற்றவர்களால் காப்பாற்றப்பட்டனர். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஊட்டமலையை சேர்ந்த பரிசல் ஓட்டி முருகேசன்(52), அதே பகுதியை சேர்ந்த முத்து, கிருஷ்ணமூர்த்தி, ராமு, மாது, பெருமாள், இன்னொரு முருகேசன் என 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது ஒரு முருகேசன் இறந்துவிட்டார்.
இந்த வழக்கில் நேற்று தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் 6பேருக்கு மேல் பரிசலில் ஏற்றி செல்லக்கூடாது. உயிர் காக்கும் லைப் ஜாக்கெட் போட ேவண்டும் என்ற விதியை மீறியும், அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் பரிசலை இயக்கி விபத்தை ஏற்படுத்திய பரிசல் ஓட்டி முருகேசனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபப்பு தீர்ப்பு வழங்கியது. தண்டனை விதிக்கப்பட்ட முருகேசன் வேலூர் சிறைக்கு போலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.