ஆரணி அருகே பிரபல ஹோட்டலில் சிக்கன் உணவு சாப்பிட்ட சிறுமி பலி.. மேலும் 24 பேருக்கு சிகிச்சை!
ஆரணி: ஆரணியில் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலியானதை அடுத்து அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது. மேலும் 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளரும் சமையலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (46), அரிசி ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (40).
இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக இருந்து வருகிறார். இவர்களுக்கு லோஷினி (10) என்ற மகளும் சரண் (14) என்ற மகனும் உள்ளனர்.
வீடு புகுந்த நாக பாம்பு.. 6 வயது சிறுமி செய்த பகீர் காரியம்.. பதறிய பெற்றோர்.. வைரல் வீடியோ
அசைவ ஹோட்டல்
இவர்கள் 4 பேரும் கடந்த 8ஆம் தேதி இரவு ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அசைவ ஹோட்டலில் தந்தூரி உணவு வகைகளை சாப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டனர்.
சிறுமியின் உடல்நலம் பாதிப்பு
பின்னர் அங்கு லோஷினியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அச்சிறுமி இறந்துவிட்டார். அதே ஹோட்டலில் சாப்பிட்ட 24 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அசைவ ஹோட்டல்
சம்பவத்தை தொடர்ந்து திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பவம் நடந்த அசைவ ஹோட்டலில் உணவு மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தினார். ஆரணி நகர போலீஸார் அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஓட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
உரிமையாளர், சமையலர் கைது
இந்த நிலையில் அம்ஜத் பாஷாவையும் சமையலர் முனியாண்டியையும் இன்றைய தினம் போலீஸார் கைது செய்தனர். ஹோட்டலில் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தீராத வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டதை அடுத்து இவர்கள் சாப்பிட்ட உணவில் கெட்டு போன இறைச்சி பயன்படுத்தப்பட்டதா இல்லை வேறு ஏதேனும் கலக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆய்வு செய்ய கோரிக்கை
இறந்த சிறுமியின் தாய்க்கும் உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவான பிரியாணியை சாப்பிட்டு சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து அனைத்து அசைவ ஹோட்டல்களிலும் அவ்வப்போது அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.