தீனதயாளன் வீட்டில் மேலும் 100 சிலைகள் சிக்கின... சிலை கடத்தல் வழக்கில் நடிகை கைதாகிறார்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் தீனதயாளன் வீட்டில் மேலும் 100 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை பெற்று பூட்டப்பட்டிருந்த 2 அறைகளின் கதவை உடைத்து நடத்தப்பட்ட சோதனையில் சிலைகள் சிக்கின. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் 2 அடி முதல் 6 அடி வரை உயரம் கொண்டவை என்பது தெரியவந்துள்ளது.
சிலை கடத்தல் வழக்கில் இன்னொரு திருப்பமாக பிரபல நடன நடிகை ஒருவரின் பெயரும் அடிபடுகிறது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில் ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இரு தினங்களுக்கு முன், அந்த பங்களாவுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 55 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில், மான்சிங், 58, குமார் 58, ராஜாமணி 60 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் ஏஜெண்டுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தலைமறைவான தீனதயாளன்
வீட்டின் உரிமையாளரும் கடத்தல் கும்பலின் தலைவருமான தீனதயாளன், 78 அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தீனதயாளனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை பங்களா
ஆழ்வார்பேட்டை பங்களாவில் இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் அந்த அறைகளை போலீஸார் சோதனை செய்யவில்லை. அங்கு சிலைகள் மற்றும் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் இருக்கலாம் என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

அறைகள் உடைத்து சோதனை
அந்த வீட்டில் இருந்த 2 அறைகளை கோர்ட் அனுமதி பெற்று சிலை கடத்தல் தடுப்பி பிரிவு அதிகாரிகள் உடைத்து சோதனை நடத்தினர். ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் இந்த சோதனை நடந்தது.

100 சிலைகள் பறிமுதல்
இந்த சோதனையில், 2 அறைகளிலும் மேலும் 100 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே விலை மதிப்பு மிக்க 54 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நடிகைக்கு தொடர்பு
சிலை கடத்தல் சம்பவத்தில் முக்கிய திருப்பமாக நடிகை ஒருவரின் பெயரும் அடிபடுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகையின் திரை உலக வாரிசான இவர், தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொத்தம் 200 படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகளை பெற்றவர்.

நடன நடிகை
இந்த நடிகைக்கும் சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெளிநாடு ஒன்றில் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார் அந்த நடிகை.

கடத்தல் சிலைகள் விற்பனை
தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் சிலைகளை வாங்கி அதை அதிக விலைக்கு விற்கும் வேலையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கும் தீனதயாளனுக்கும் தொடர்பிருப்பது உறுதியானால் இவரும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியுள்ளது.

பாஸ்போர்ட் முடக்கம்
கடந்த 1965ல் இருந்து, இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டு இதில் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் தீனதயாளன். தற்போது இவர் வெளிநாட்டுக்குத் தப்பி செல்லாமல் இருக்க போலீஸார் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உள்ளனர்.

சினிமா புள்ளிகளுக்கு தொடர்பு
சிலை கடத்தல் வழக்கில் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கடந்தாண்டு சிலை கடத்தல் விவகாரத்தில் பிரபல சினிமா இயக்குநர் சேகர் கைது செய்யப்பட்டார்.

நடன நடிகை சிக்குகிறார்
இந்த நிலையில் நடன நடிகையின் பெயரும் அடிபடும் நிலையில் அவரும் கைது செய்யப்பட்டால் இந்த சிலை கடத்தல் தொடர்பான முக்கிய விவரங்களும், இதில் தொடர்புடைய சில சினிமா பிரபலங்கள் குறித்த தகவல்களும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications